மோடியின் தலைமைத்துவம் 24 கேரட் தங்கத்தைப் போன்றது: ராஜ்நாத் சிங்!
நெருக்கடியை சமாளிக்க இந்தியா தயார்..
மேற்காசிய மோதலால் ஏற்படக்கூடிய எந்தொரு நெருக்கடியையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள கேரளத்தில் நடைபெற்ற சைனிக் சம்மான் சம்மேளனம் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நாட்டின் எரிபொருள் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதாகவும், வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மிகவும் பொருத்தமான அரசியல் கட்சி என்றால் அது பாஜக தான், அது மோடியின் உத்தரவாதங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் பாஜகவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மோடியின் தலைமைத்துவம் 24 கேரட் தங்கத்தைப் போன்றது, அது பலமுறை சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4ல் வாக்குகள் எண்ணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.