அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் நீதிமன்ற காவலை 2 வாரங்களுக்கு நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
புது தில்லி: சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் நீதிமன்ற காவலை 2 வாரங்களுக்கு நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரான சத்யேந்தா் ஜெயின், காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, அவரது காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனு மீது சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.
முன்னதாக நீதிமன்ற விசாரணையின்போது, ஜெயின் அல்லது அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வழக்குரைஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அமலாக்கத் துறையின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரும் மனுவை ஏற்க மறுத்துவிட்டாா். அப்போது, ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, காணொலி வாயிலாக ஜெயின் ஆஜராவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. அதன் பின்னா், அமலாக்கத் துறையின் மனு மீதான வாதங்களை கேட்ட நீதிபதி, சத்யேந்தா் ஜெயினின் நீதிமன்றக் காவலை 14 நாள்கள் நீட்டித்து உத்தரவிட்டாாா்.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ், பணமோசடி வழக்கில் 57 வயதான அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கடந்த மே 30-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், கடந்த வாரம் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததையடுத்து, அவா் தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.