ஒருநாள் சஞ்சு சாம்சன் மாதிரி மீண்டு வருவேன்: பரத்
நடிகர் பரத் தன்
நடிகர் பரத் சினிமாவில் மீண்டும் தனக்கான இடத்தைப் பிடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் பரத் செல்லமே, காதல், பட்டியல், எம் மகன் என வெற்றிப்படங்களாகக் கொடுத்தார். நடிப்பிலும் தேர்ந்த பாவனைகளைக் கொடுக்கத் தெரிந்தவர் என்பதால் தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரமாக வளர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரவாண், திருத்தணி ஆகிய திரைப்படங்களால் ஏமாற்றத்தைச் சந்தித்த பரத் 555 திரைப்படம் மூலம் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
இப்படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உடல்பயிற்சி செய்து கட்டுமஸ்தான தோற்றத்திலேயே இருந்தார். ஆனாலும், 555 தோல்வியடைந்து பரத்துக்கு பெரிய பின்னடவைக் கொடுத்தது.
இறுதியாக, 2019-ல் வெளியான காளிதாஸ் திரைப்படம் அவருக்கு வெற்றியைக் கொடுத்தாலும் அதன்பின் வெளியான படங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தற்போது, காளிதாஸ் - 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப். 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பரத், ”சிலர் என்னிடம், ‘யார் யாரோ ஒன்னுமே பண்ணாம எங்கயோ போயிட்டு இருக்காங்க’ எனக் கூறும்போதெல்லாம் காயப்பட்டிருக்கிறேன். அது அவர்களின் விதி, அதிர்ஷ்டம். நான் தவறான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆனால், இப்போதும் களத்தில் இருக்கிறேன். ஒருநாள் சஞ்சு சாம்சன் மாதிரி திருப்பி அடித்து மீண்டு வருவேன். ரசிகர்கள் என்னுடைய புதிய வருகைக்காக காத்திருக்கின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.