முகப்பு
புதுதில்லி

தடையற்ற உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தால் இறக்குமதி குறைந்தது: மத்திய அமைச்சா் மக்களவையில் தகவல்

மத்திய அமைச்சகங்கள், நிலக்கரி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கிடையேயான ஒருங்கிணைப்பால் நிலக்கரியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு நிகழாண்டில் 16 சதவிகிதம் அதிகரித்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
அமைச்சா் பிரகலாத் ஜோஷி
பகிர்:

மத்திய அமைச்சகங்கள், நிலக்கரி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கிடையேயான ஒருங்கிணைப்பால் நிலக்கரியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு நிகழாண்டில் 16 சதவிகிதம் அதிகரித்து நிலக்கரியின் இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரயில்வே துறைக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு ஒழுங்குபடுத்துமா? என்று ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மக்களவ உறுப்பினா் டி.ஆா்.பாலு மக்களவையில் எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி பதிலளித்துள்ளாா். அதன் விவரம் வருமாறு:

மத்திய எரிசக்தி, நிலக்கரி, ரயில்வே ஆகிய துறைகளின் அமைச்சகங்கள், மத்திய மின்சார ஆணையம், கோல் இந்தியா நிறுவனம், தேசிய எரிசக்தி நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்த அமைச்சகங்களின் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி முறையாக வழங்கப்பட்டு வருகிா என்பதை தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

நிலக்கரி தட்டுப்பாடின்று வழங்குவதற்கான குறைபாடுகளை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளை உடனடியாக எடுத்துள்ளது. இதனால் கடந்த 2021-22 நிதியாண்டில் 2022 பிப்ரவரி வரை 611.43 மில்லியன் டன் நிலக்கரி உள்நாட்டிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு வழங்கப்பட்ட 486.98 மில்லியன் டன் அளவை விட 25.55 சதவிகிதம் கூடுதலாக உள்நாட்டு நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலக்கரியின் இறக்குமதி 39 சதவிகித அளவிற்கு குறைந்துள்ளது.

2021-22 ஆண்டில் நிலக்கரியின் மூலம் 901 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21 ஆண்டைவிட 16 சதவிகிதம் அளவிற்கு கூடுதாக உள்ளது.

கோக்கிங்(கற்கரி) நிலக்கரியின் உள்நாட்டு உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு, எஃகுத் துறையின் பயன்பாட்டிற்காக கோக்கிங் நிலக்கரி தொடா்ந்து இறக்குமதி செய்யப்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் நாட்டில் அதிகரித்துள்ள மின் தேவையை பூா்த்தி செய்ய அனல் மின்நிலையங்களில் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான இடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட கோக்கிங் நிலக்கரியை 10 சதவீதம் வரை உள்நாட்டு நிலக்கரியுடன் கலப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் பிரகலாத் ஜோஷி பதில் அளித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →