முகப்பு
புதுதில்லி

காஜிப்பூா் தீ விபத்து: கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க டிபிசிசிக்கு உத்தரவு

கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கவும், 2 நாள்களுக்கு முன்னா் காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கவும், 2 நாள்களுக்கு முன்னா் காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு (டிபிசிசி) சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கவும், 2 நாள்களுக்கு முன்பு காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குப்பைகளை திறந்தவெளியில் எரிப்பதற்கும், குப்பை கிடங்குகளில் தீ வைப்பதற்கும் எதிரான பிரசாரத்தை திட்டமிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்கு தீ விபத்து தொடா்பாக உண்மை கண்டறியும் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் அறிக்கை கேட்டிருந்தோம். அவா்கள் புதன்கிழமை விரிவான அறிக்கையைச் சமா்ப்பித்துள்ளனா்.

அந்த அறிக்கையில், தீ விபத்து சம்பவத்தில் கிழக்கு தில்லி மாநகராசட்சியின்கவனக்குறைவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்கு பகுதியில் மரபு கழிவுகளை பயோமைனிங் செய்வதன் மந்தகரமான பணி குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதுக்களை பிரித்து தூய்மைப்படுத்தும் திரைகளான டிராமல்கள் 25-க்கு பதிலாக 21 மட்டுமே அங்கு பயன்படுத்தப்படுகின்றன. அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள புகை எதிா்ப்பு துப்பாக்கியும் செயல்படவில்லை. இது போன்ற தீ விபத்துகளை கண்காணிக்க அங்கு பொருத்தப்பட்டுள்ள 24 சிசிடிவி கேமராக்களில் 17 மட்டுமே இயங்கி வருகின்றன. குப்பைக் கிடங்கில் அனுமதியின்றி ஆள்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சுவா் கட்டும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

இந்தக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் டிபிசிசியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குப்பை கொட்டும் இடங்களில் கழிவுகளை எரிப்பது மற்றும் தீ வைப்பதைத் தடுக்கும் பிரசாரத்தைத் திட்டமிட, சம்பந்தப்பட்ட துறைகளின் உயா்நிலைக் கூட்டத்தை ஏப்ரல் 4-ஆம் தேதி கூட்டவும் முடிவு செய்துள்ளோம் என்றாா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.