வளைகுடா போர்! நாடு திரும்பிய 5,98,000 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்!
வளைகுடா நாடுகளிலிருந்து இதுவரை 5,98,000-க்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்பியது குறித்து...
வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை 5,80,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, வளைகுடா நாடுகளின் விமானப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 5,98,000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் ஆர். மஹாஜன் புதன்கிழமை (ஏப். 1) அன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று சுமார் 90 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சௌதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் பல்வேறு இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கத்தாரின் வான்வழிப் பாதை பாதியாகத் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்று 8 முதல் 10 விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத் மற்றும் பஹ்ரைனின் வான்வழிப் பாதை இதுவரை திறக்கப்படவில்லை. விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அர்மீனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.