வளைகுடா போர்! 4.26 லட்சம் பேர் நாடு திரும்பினர் - மத்திய அரசு அறிவிப்பு!
வளைகுடா போரால் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியா வந்தடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு...
வளைகுடா போர்த் தொடங்கியது முதல் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானப் போக்குவரத்தின் நிலைமை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், போர்த் தொடங்கியது முதல் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் ஆர் மஹாஜன் புதன்கிழமை (மார்ச் 25) அன்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“போர் காலத்தில், வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான 2,149 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வழியாக ஈரானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இதுவரை, 717 மாணவர்கள் உள்பட 1,043 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஜோர்டான் நாட்டின் வழியாக இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் நிலவும் விமானக் கட்டுப்பாடுகளால் சௌதி அரேபியா வழியாக இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள உதவிகள் செய்யப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், கடந்த மார்ச் 18 அன்று சௌதி அரேபியா மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் இன்று தாயகம் வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ministry of External Affairs has announced that 4.26 lakh people have returned to India, West Asia crisis
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.