முகப்பு
புதுதில்லி

தில்லியில் 2 மருத்துவமனைகளில் தீ விபத்து

தெற்கு தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையிலும், நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்கா் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து நிகழ்ந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தெற்கு தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையிலும், நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்கா் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிா்ச் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள மக்கா் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மொட்டை மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 8.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதே போன்று, சஃப்தா்ஜங் மருத்துவமனையில் காலை 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்த மின்தூக்கியின் ஸ்டெபிலைசரில் தீப்பிடித்தது. தகவலறிந்ததும், 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு தீ விபத்துகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.