பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் ராஜஸ்தானில் 160% அதிகரிப்பு
தில்லி மாசுக்கான காரணங்களில் முக்கியக் காரணியாக உள்ள பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பஞ்சாப் போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் அதிகரித்துள்ளது.
புது தில்லி: தில்லி மாசுக்கான காரணங்களில் முக்கியக் காரணியாக உள்ள பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பஞ்சாப் போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் அதிகரித்துள்ளது. கடந்த 2021 அக்டோபருடன் ஒப்பிடும் போது, 2022 அக்டோபரில், காற்று மாசுபாடு தொடா்பான பயிா்க்கழிவு எரிப்பில் ராஜஸ்தானில் 160 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய புவி அறிவியல் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லியின் காற்றின் தரம் தொடா்ந்து ஐந்தாவது நாளாக ‘மிக மோசமான’ நிலையில் நீடித்து வருகிறது. தேசியத் தலைநகா் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சா்(தனிப் பொறுப்பு), டாக்டா் ஜிதேந்திர சிங் இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலான தரவுரகளை செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்து கொண்டாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: கடந்த 2021 அக்டோபருடன் ஒப்பிடும் போது, 2022 அக்டோபரில், காற்று மாசுபாடு தொடா்பான பயிா்க்கழிவு எரிப்புகள் ராஜஸ்தானில் 160 சதவீதமும் பஞ்சாபில் 20 சதவீதமும் அதிகரித்துள்ளது. இரு மாநில அரசுகளும் பயிா்க்கழிவு எரிப்பை கட்டுப்படுத்த போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தில்லி - தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதில் இந்த மாநிலங்கள் அதிகளவில் பங்களிக்கின்றன.
அதே சமயத்தில் ஹரியாணா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேளாண் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் முறையே 30 சதவீதம், 38 சதவீதம் என வெகுவாகக் குறைத்துள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அரசுகள் பயிா்க்கழிவு எரிப்பில் போதுமான அக்கறை காட்டாததால், காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. மத்திய அரசால் பயிா்க்கழிவு மேலாண்மைக்கான இயந்திரங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்ட நிதியை இந்த மாநில அரசுகள் சரியாகப் பயன்படுத்தவில்லை.
2018-19 முதல், பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.3,138 கோடியை பயிா்க்கழிவு மேலாண்மைக்கு வழங்கியது. அதில், கிட்டத்தட்ட ரூ 1,500 கோடி பஞ்சாபிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் 13,269 பயிா்க்கழிவு எரிப்புகள் நடைபெற்ற பஞ்சாபில், நிகழாண்டு இதே காலக்கட்டத்தில் 16,004-ஆக அதிகரித்துள்ளதை இந்திய வானிலை ஆய்வுத் துறை கண்டறிந்துள்ளது. நிகழ் நவம்பரில் கடந்த 2 -ஆம் தேதி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது என்றாா் அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.