முகப்பு
புதுதில்லி

வழக்குரைஞா்களுக்கான கட்டணத் தொகை விவகாரம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பட்டியலிடப்பட்ட வழக்குரைஞா்களுக்கு தொழில் முறைக் கட்டணத்தைச் செலுத்துவதைத் தடையின்றிச் செயல்படுத்த ஓடிபி (ஒரு முறை கடவுச் சொல்) அடிப்படையிலான சிஸ்டத்தை இணையதள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

பட்டியலிடப்பட்ட வழக்குரைஞா்களுக்கு தொழில் முறைக் கட்டணத்தைச் செலுத்துவதைத் தடையின்றிச் செயல்படுத்த ஓடிபி (ஒரு முறை கடவுச் சொல்) அடிப்படையிலான சிஸ்டத்தை இணையதள ஒற்றைச் சாளர அமைப்புமுறை (ஓஎஸ்டபிள்யுஎஸ்) இணையதளத்தில் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள வழக்குரைஞா்களின் பில்களை அனுமதிக்குமாறு ஆகஸ்ட் 2020-இல் உத்தரவிட்டிருந்த நிலையில், அது இதுவரை செய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்ட உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணை நாளான டிசம்பா் 12-க்கு முன் அந்த நடவடிக்கையை ஆக்கப்பூா்வமான முறையில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

முன்னதாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பட்டியலிடப்பட்ட வழக்குரைஞா்களின் தொழில்முறைக் கட்டணம் அல்லது சேவைக் கட்டண பில்களை செலுத்தாமல் இருப்பது தொடா்பான முறையீட்டு மனுவை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சத்தீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது, தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, வழக்குரைஞா் அருண் பன்வாா் ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவிக்கையில், புதிய ஓஎஸ்டபிள்யுஎஸ் இணையதளமானது வழக்குரைஞா்களுக்கு தொழில்முறைக் கட்டணம் செலுத்தும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த நடைமுறை இன்னும் நீளமானதாகவும், சுமைதருவதாகவும் உள்ளது.

ஓஎஸ்டபிள்யுஎஸ் இணையதளத்தில் ஒடிபி (ஒரு முறை கடவுச்சொல்) சாா்ந்த அமைப்புமுறை இருக்க வேண்டும். இது பில்களை அங்கீகரிக்கும் நேரத்தை குறைக்கும் என்று தெரிவித்தனா். அதற்கு நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தற்போதைய நடைமுறை சிக்கலானது மற்றும் தடையின்றி பில்களை சமா்ப்பிப்பதன் நோக்கத்தை தோல்வியுறச் செய்வதாகவும் உள்ளதால் ஓடிபி அடிப்படையிலான கையொப்பம் அளிக்கும் சில ஏற்பாடுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இது செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இது தொடா்பாக கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘இன்று வரை நிலுவையில் உள்ள பில்களை அனுமதிக்க அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.