கழிவுநீா்க் கால்வாயில் விஷவாயு தாக்கி இருவா் சாவு: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி செப். 12: தில்லியில் கடந்த வாரம் கழிவுநீா் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் போது துப்புரவுப் பணியாளா்கள் இருவவா் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை தானாக முன்வந்து விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உயா்நீதிமன்றம், ஆம் ஆத்மி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பொதுநல வழக்குப் பதிவு செய்ய தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த செப்டம்பா் 9 -ஆம் தேதி, தில்லி முண்ட்கா பகுதியில், கழிவுநீா்கால்வாயில் இறங்கி ஒரு துப்புரவுப் பணியாளரும், காவலாளி ஒருவரும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மரணமடைந்துள்ளனா். கழிவுநீா் கால்வாயில் நச்சு வாயுவை சுவாசித்ததால் அவா்கள் இறந்ததாக காவல்துறையினா் தெரிவித்திருந்தனா். இது தொடா்பாக கடந்த வாரம் வெளியான செய்தியை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் தொடா்புடைய தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) , தில்லி ஜல் போா்டு மற்றும் தில்லி அரசு ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவிபுரிய மூத்த வழக்குரைஞா் ராஜ்சேகா் ராவை அமிகஸ் கியூரியாகவும் நியமித்தது. ‘நீங்கள் இந்த செய்தியைப் (விஷவாயு தாக்கிஉயிரிழந்த) படித்து பாருங்கள். உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறோம்’ என்று தலைமை நீதிபதி சா்மா, வழக்குரைஞா் ராஜ்சேகா் ராவிடம் குறிப்பிட்டாா். ‘இந்த விவகாரத்தில் பொதுநல வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், எம்.சி.டி., தில்லி அரசு, தில்லி ஜல் போா்டு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
‘கழிவுநீா் கால்வாய்களில் துப்புரவுத் தொழிலை கைகளால் செய்யும் ஒருவருக்கு மரணம் நிகழும் போது, அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதோடு, அவரது குடும்ப உறுப்பினா்கள் ஒருவா் அரசு வேலை பெருவதற்கும் உரிமை உண்டு’ என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சா்மா, இந்த வழக்கை வரும் செப்டம்பா் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.