பெண்களுக்கு பாதுகாப்பில்லை! இது நாடா? இல்ல காடா? பெரம்பூரில் விஜய்!
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் பற்றி...
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தவெக தலைவர் விஜய் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கி விஜய், மக்கள் மத்தியில் பேசியதாவது:
”வடசென்னையின் மிகப்பெரிய அடையாளத்தின் ஒன்றாக இருக்கும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன். உழைப்பின் வாசனை இருக்கும் மக்கள் மத்தியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதைப் பொருள் அதிகமுள்ள, சட்டம் - ஒழுங்கு சரியில்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும். தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தது தீய சக்தி திமுகதான். இப்படியொரு ஆட்சியை நடத்தியதற்கு விரைவில் விடைபெறப் போகும் ஸ்டாலின் சார்தான் காரணம்.
அடிப்படை வசதிகூட இல்லாமல் எப்படி இருக்க முடியும். பெண் குழந்தைகள் இரவில் பாத்ரூம்கூட செல்ல முடியவில்லை. பாட்டி வயதில் இருப்பவர்களுக்குகூட பாதுகாப்பு இல்லை. டீக்கடையில் நிம்மதியாக டீ குடிக்க முடியவில்லை. போதையில் வந்து வெட்டுகிறார்கள். இது நாடா? இல்ல காடா?
ஸ்டாலின் சாருக்கு மக்கள் எல்லாம் முக்கியம் கிடையாது. அவருக்கு திமுக அரசுக்கும் 5 ஆண்டுகளில் குடும்பத்தோடு கொள்ளையடித்ததுதான் முக்கியம்.
டாஸ்மாக்கில் மட்டும் ரூ. 1,000 கோடி ஊழல், வெளியே தெரியாமல் நிறைய ஊழல் நடத்திருக்கிறது. நகராட்சித் துறையில் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்துள்ளது. நமது குழந்தைகள் வேலை வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தருகிறார்கள்.
வசதியான வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நிற்கிறேன். இரண்டே முனைப் போட்டிதான்” எனத் தெரிவித்தார்.