முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 792 புகார்கள்! இதுவரை எதுவும் தீர்க்கப்படவில்லை எனத் தகவல்!
தமிழ்நாடு முதல்வர் விஜய் தன்னுடைய பெரம்பூர் தொகுதியில் தொடங்கிய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட எந்தப் புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி...
முதல்வர் விஜய்யின் பெரம்பூர்த் தொகுதியில் தொடங்கியதிலிருந்து இதுவரையிலும் குறைதீர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 792 புகார்களில் எதன் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இணையதளமே தெரிவிக்கிறது.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தான் வெற்றி பெற்ற தொகுதியான பெரம்பூரில் கடந்த வாரத்தில், ஜூலை 13, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தைக் கோலாகலமாகத் திறந்துவைத்தார்; கூடவே, தொகுதி மக்களின் புகார்களைக் களைவதற்காக, தமிழக வெற்றிக் கழக பேனரில் உங்கள் உரிமையைப் பதிவு செய்யுங்கள் என tvkcm.com/transparency என்ற மக்கள் சேவை இணைய தளத்தையும் தொடக்கிவைத்தார். ஆனால்...
இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி இதுவரை, ஜூலை 20 ஆம் தேதி பகல் 1 மணி நிலவரப்படி, பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டுள்ள 792 புகார்களில் ஒன்றின் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தெரிவிக்கப்பட்ட இந்தப் புகார்களில் தீர்வு காணப்பட்டவை – 0, செயல்பாட்டில் இருப்பவை – 0, தீர்வு விகிதம் – 0 என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
பொதுவான குறைபாடுகள் – 318, மின்சாரம், மின்வெட்டு தொடர்பாக – 163, சாலைக் குறைபாடுகள் – 150, நலம் – சுகாதாரம் – 40, சாலைப் பாதுகாப்பு – 29, தெருவிளக்குகள் – 28. குப்பைகள் அகற்றுவது தொடர்பாகக்கூட 25 புகார்கள் இருக்கின்றன. மழை நீர் தேங்குவது பற்றி 20 புகார்கள் இருக்கின்றன.
தொகுதியிலுள்ள வார்டுவாரியாக என்றால் 34-வது வார்டு – 342, 35-ல் 106, 36-ல் 84, 45-ல் 73, 37-ல் 69, 44-ல் 61, வார்டு 46- 57 புகார்கள். எந்தவொரு புகார் மீதும் இதுவரை தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி எந்தப் புகார்களின் மீதும் இதுவரை எந்தத் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இணையதளத்திலுள்ளபடி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா? அல்லது ஒருவேளை நடவடிக்கை எடுத்தாலும், இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லையா?
முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியிலேயே மக்களுடைய புகார்களின் மீதான நடவடிக்கைகளைப் பொருத்தவரை இதுதான் நிலவரமா? என்றால் பிற தொகுதிகளில் நிலைமை என்னவாக இருக்கும்?
Regarding the lack of action taken on any complaints registered on the website launched by Tamil Nadu Chief Minister Vijay in his Perambur constituency...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.