முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!
முதல்வர் விஜய்யின் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டது பற்றி...
பெரம்பூரில் உள்ள தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் சாலையிலே கழிவுநீர் செல்வதாகவும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லய் என்றும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் எழுப்பியுள்ளனர்.
நீதிமன்ற வழக்கின் காரணமாக அப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்து தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இதுதொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், 60-க்கும் மேற்பட்ட பெண்கள், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடத்த வந்த தவெக நிர்வாகிகளுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
”கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். சாலையிலே கழிநீர் செல்கிறது. இதையெல்லாம் சரி செய்து தருவார் என்ற நம்பிக்கையில்தான் வாக்களித்துள்ளோம்.
கழிவுநீரை மிதித்து கொண்டுதான் வீட்டுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவத்துக்காக அதிகளவில் செலவழித்து வருகின்றோம். முதல்வர் எங்கள் தொகுதியை பார்வையிட்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக நிர்வாகிகள் உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
Perambur MLA office of Chief Minister Vijay besieged!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.