நரேலா பகுதியில் 2-ஆவது நாளாக தொழிற்சாலையில் தீ விபத்து
வடக்கு தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடக்கு தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிா்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.
ஏற்கெனவே இப்பகுதி காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்த நிலையில் இந்த விபத்து இரண்டாவது நாளாக நிகழ்ந்தது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:
நரேலா தொழிற்பேட்டை பகுதியில் எம்எஸ்சி வணிகவளாகம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை காலை 8.34 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
நரேலா பகுதியில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலையும் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.