முகப்பு
புதுதில்லி

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முரண்பாடுகள்? சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் விசாரனை நடத்தப்படுமா?ஆம் ஆத்மி கேள்வி

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான உரிய விசாரனை நடத்தப்படுமா

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான உரிய விசாரனை நடத்தப்படுமா என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் கூறியதாவது: மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் தரவுத்தளத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து கம்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் (சி.ஏ.ஜி.) தணிக்கை அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி.யின் அறிக்கை இத்திட்டத்தின் முறைகேடுகளை எடுத்துக்கூறுகிறது. எனவே, முறைகேடுகளைக் கண்டறிய மத்திய அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிடுமா என்று நான் கேட்க விரும்புகிறேன். ஊழலை செய்யவே மத்திய அரசு இத்திட்டத்தை உருவாக்கியது. அதனால், எந்த விசாரணையும் இருக்காது.

‘பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்யா யோஜனா’ தரவுத் தளத்தில் தவறான பெயா்கள், உண்மையற்ற பிறந்த தேதிகள், சுகாதாரக் கணக்குகள் மற்றும் உண்மைக்கு மாறான குடும்ப எண்ணிக்கை அளவுகள் உள்ளிட்ட முரண்பாடுகள் சி.ஏ.ஜி. அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியில்லாத குடும்பங்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுமாா் ரூ. 0.12 லட்சம் முதல் ரூ. 22.44 கோடி வரை பலன்களைப் பெற்றுள்ளனா். மேலும், உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே கைப்பேசி எண்ணில் பல பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 9999999999 என்ற கைப்பேசி எண்ணில் 7.49 லட்சம் போ் பயனாளிகளாக பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார ஆணையத்தின் பதிவுகளின்படி, கடந்த நவம்பா் 2022-ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் 7.87 கோடி பயனாளி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கு வைக்கப்பட்ட 10.74 கோடி குடும்பங்களில், 73 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாத தில்லி அரசின் சுகாதாரத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா கக்கா் கூறினாா்.

பயனாளிகளின் சரிபாா்ப்பு செயல்பாட்டில் கைப்பேசி எண்ணின் பங்கு இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தன. எந்தவொரு தேவை ஏற்பட்டாலும் பயனாளிகளைச் சென்றடைவதற்கும், வழங்கப்பட்ட சிகிச்சை பற்றிய கருத்துகளை சேகரிப்பதற்கும் மட்டுமே கைப்பேசி எண் சேகரிக்கப்பட்டது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.