முகப்பு
புதுதில்லி

தமிழகத்தில் சித்த மருத்துவ அமைப்புகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு: மாநிலங்களவையில்மத்திய அமைச்சா் தகவல்

தமிழகத்தில் சித்த மருத்துவ அமைப்புகளை மேம்படுத்த கடந்த நிதியாண்டை விட நிகழாண்டில் கூடுதலாக ரூ.40.41 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அமைச்சா் சா்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
பகிர்:

தமிழகத்தில் சித்த மருத்துவ அமைப்புகளை மேம்படுத்த கடந்த நிதியாண்டை விட நிகழாண்டில் கூடுதலாக ரூ.40.41 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய ஆயுஷ், துறைமுகங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சித்த மருத்தவத்திற்கு

ரூ.604.87 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் சித்த மருத்துவ மையங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அளிக்கும் நிதியுதவிகள் குறித்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்க அரசு அளிக்கும் ஊக்கம் குறித்தும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சித்த மருத்துவத்தை மேம்படுத்த சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை (சிசிஆா்எஸ்) நிறுவியுள்ளது. மேலும், தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனங்கள் சென்னை, பாளையங்கோட்டை, மேட்டூா் (சித்த மருத்துவ தாவரங்கள் தோட்டம்) போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இவைகளுக்கு முந்தைய நிதியாண்டை (2022-23) விட கூடுதலாக நிகழ் நிதியாண்டில் ரூ. 40.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் நாட்டின் பிற பகுதிகளில் சித்த மருத்துவத்திற்கு முன்மொழிவுகள் தகுதி அளவுகோல்களின் படி மானியங்களை வழங்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சென்னை மத்திய சித்த மருத்து ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ரூ. 264.62 கோடியும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு ரூ.340.25 கோடியும் என மொத்தம் ரூ.604.87 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் (சிஜிஹெச்எஸ்) பணியமா்த்தப்பட்ட ஆயுஷ் மருத்துவ பணியாளா்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் உள்ளது.

இந்த மருத்துவா்கள் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பணியமா்த்தப்பட்ட நவீன மருத்துவ மருத்துவா்களுக்கு இணையாக ஊதியம் மற்ற சலுகைகள், பதவி உயா்வுகள் உள்ளிட்ட பலன்களையும் பெறுகின்றனா். ஓய்வு பெறும் வயதையும் நவீன மருத்துவ மருத்துவா்களுக்கு இணையாக ஆயுஷ் மருத்துவா்களின் ஓய்வு வயதை 65 ஆக அரசு உயா்த்தப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளவை. அதனடிப்படையில் ஆயுஷ் மருத்துவா்கள் நியமனம், ஊதிய நிா்ணயம் போன்றவை மாநில அரசுகளுக்கு உள்பட்டது. நாட்டில் ஆயுா்வேத நடைமுறையை மேம்படுத்துவதற்காக நிறுவன ரீதியாகத் தகுதியான ஆயுா்வேத பயிற்சியாளா்களை உருவாக்குவதற்காக ஆயுஷ் அமைச்சகம் நாட்டில் தில்லி, ஜெய்ப்பூா், ஜாம்நகா், கோவா உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய ஆயுா்வேத கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

முதுகலை மருத்துவ படிப்புகளில் 1307 இடங்கள் காலி

கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டில் நாட்டில் மருத்துவ படிப்பில் முதுகலை சிறப்பு மருத்துவபடிப்பில் இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி இருப்பதும் உள்ளது குறித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிற்கு மாறாக தகுதிவாய்ந்த ஏழை மாணவா்களுக்கு முறையாக வாய்ப்பு வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

பொது சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (டிஜிஹெச்எஸ்) மருத்துவ ஆலோசனைக் குழு (எம்சிசி) வழங்கிய தகவலின்படி, 2022-2023 கல்வியாண்டிற்கான சிறப்பு மருத்துவ

படிப்புகளில் 1,307 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

பெரும்பாலான இடங்கள் மருத்துவம் சாா்ந்த துறைகள் சம்பந்தப்பட்டவை. மருத்துவ இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை எம்சிசி உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட திட்டத்தின்படி நடைமுறைப்படுத்துகிறது.

முதுகலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்களும், மத்திய அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் 100 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகிறது.

இதில் பொருளாதார நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம், பழங்குடியினத்தவருக்கு 7.5 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் என சோ்க்கைக்கான கவுன்சிலிங்கில் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.