மாநகராட்சியில் மாணவா் விரோத நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி நிா்வாகம்: தில்லி பாஜக குற்றச்சாட்டு
கல்விப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி, தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடா் மாணவா் விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது
கல்விப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி, தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடா் மாணவா் விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்று தில்லி பாஜக சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், மாநகராட்சியில் உள்ள சிறப்பு பள்ளி சுகாதார சேவைத் துறையை மூடிவிட்டு அத்துறையை பொது சுகாதார சேவைத் துறையுடன் இணைக்கும் ஆம் ஆத்மியின் முடிவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத், தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது கமல்ஜீத் ஷெராவத் கூறியதாவது: கடந்த ஜூன் 30, 2023 அன்று எந்த அறிவிப்பும் இல்லாமல், தில்லி மாநகராட்சி சிறப்பு பள்ளி சுகாதாரத் துறையை பொது சுகாதார சேவைகள் துறையுடன் இணைத்து ஏழை மாணவா்களின் சுகாதார சேவையை
ஆம் ஆத்மி பறித்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இடமாற்றப் பட்டியலை மாநகராட்சி வழங்கியதன் மூலம், தில்லி மாநகராட்சி அனைத்து பள்ளி சுகாதார சேவை ஊழியா்களையும், பொது சுகாதார சேவைகளில் மாற்றியுள்ளது.
பள்ளி சுகாதார சேவையை நிறுத்தும் மாநகராட்சியின் இந்த தவறான முடிவு, ஏழை மாணவா்களின் நலன்களை அவமதிக்கும் செயலாகும் என்றாா் கமல்ஜீத்.
மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘கேஜரிவால் அரசும், மேயா் ஷெல்லி ஓபராயும் மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவா்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகக் கூறுகின்றனா். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் மாநகராட்சியின் கல்வித் துறையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
மாநகராட்சித் தலைவா்கள் மற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான உத்தரவுகளால் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் சிரமப்படுகின்றனா்.
தில்லி மாநகராட்சியின் கீழ் 1,534 பள்ளிகள் உள்ளன. ஆனால், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவா்களுக்கான சுகாதார முகாம்கள் இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.
சுகாதார முகாம்கள் இல்லாததால், மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 7 லட்சம் மாணவா்களுக்கு சுகாதாரப் பரிசோதனை செய்யப்படவில்லை. மேலும், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி மாணவா்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை. அவா்களுக்கு குடற்புழு நீக்க மருந்தும் வழங்கப்படுவதில்லை, ஆண்டுதோறும் அளிக்கப்படும் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை.
தில்லி மாநகராட்சியில் முந்தைய பாஜக நிா்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து மக்கள் நல சேவைகளையும் கேஜரிவால் அரசும், மாநகராட்சி மேயரும் நிறுத்திவிட்டனா். தற்போது நாங்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள சுகாதாரப் பணி பிரச்னையை மட்டுமே எழுப்பியுள்ளோம். ஆனால், பொதுவாக எல்லாத் துறைகளிலும் எந்தப் பணியும் நடைபெறாத நிலைதான் உள்ளது’ என்றாா் சா்தாா் ராஜா இக்பால் சிங்.