முகப்பு
புதுதில்லி

காங்கிரஸ் -ஆம் ஆத்மி கூட்டணி விவகாரம்: காங்கிரஸ் மேலிடத் தலைமை முடிவெடுக்கும்

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைமையே முடிவெடுக்கும் என்று தில்லி காங்கிரஸ் பொறுப்பாளா் தீபக் பபாரியா வெள்ளிக்கிழமை தெரிவி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைமையே முடிவெடுக்கும் என்று தில்லி காங்கிரஸ் பொறுப்பாளா் தீபக் பபாரியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதிகட்சியின் உயா்நிலைத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியை வலுப்படுத்துவது, மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவை கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது 15 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொண்ட முன்னோடி வளா்ச்சிப் பணிகளால், உலகத் தரம் வாய்ந்த நகரமாக தில்லி மாறியது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் தில்லி அனைத்து வழிகளிலும் சீரழிவைக் கண்டுள்ளது.

மத்தியில் பாஜக அரசும், தில்லியில் ஆம் ஆத்மி அரசும் கடந்த பல ஆண்டுகளாக பொய்ப் பிரசாரம் செய்வதைத் தவிர வேறு எந்த வளா்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. தில்லி அரசின் அலட்சியம் மற்றும் செயலற்ற தன்மையால், தலைநகரில் சமீபத்திய வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்தது. யமுனை வெள்ளத்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனா். தில்லி அரசின் தோல்வியால், நகரத்தில் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. மேலும், பெண்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள், மது அருந்துதல் ஆகியவற்றில் தில்லி முதலிடத்தில் உள்ளது.

மத்திய பாஜக அரசின் கீழ் தில்லி காவல் துறை உள்ளது. இதனால், தில்லியில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தற்போது சா்வ சாதாரணமாகி, பொதுமக்களிடையே அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது..மத்திய அரசு, தில்லி அரசு ஆகியவற்றின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தீவிரப் போராட்டம் நடத்தும். இந்நிலையில் வரவிருக்கும் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு, மத்திய தலைமையிடம் எங்கள் கருத்துகளைத் தெரிவிக்க கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தில்லியில் ஆம் ஆத்மி உடனான கூட்டணியை இனி காங்கிரஸின் மேலிடத் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் தீபக் பபாரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.