துணை முதல்வா் சிசோடியா அலுவலகத்தில் சோதனை? ஆவணங்கள் கோரப்பட்டதாக சிபிஐ தகவல்
தில்லி கலால் வரிக் கொள்கை வழக்கு தொடா்பான சில ஆவணங்களை பெறுவதற்காக சிபிஐ சனிக்கிழமை தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் அலுவலகத்திற்குச் சென்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன
தில்லி கலால் வரிக் கொள்கை வழக்கு தொடா்பான சில ஆவணங்களை பெறுவதற்காக மத்திய குற்றப்புலனாய்வுத் துறையினா் (சிபிஐ) சனிக்கிழமை தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் அலுவலகத்திற்குச் சென்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயத்தில், தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ குழு ‘சோதனை’ நடத்தியதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கலால் கொள்கை முறைகேடுகள் தொடா்பாக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. அதே சமயத்தில் சிபிஐ வட்டாரங்கள் சிசோடியா அலுவலத்தில் இந்த முறைகேடுகள் தொடா்பாக சில ஆவணங்கள் கோரி சம்மன் மட்டுமே அளிக்கப்பட்டது என பின்னா் தெரிய வந்தது.
தில்லி துணை முதல்வா் மனீஸ் சிசோடியாவும் தனது ட்விட்டரில் பதிவில், ‘முந்தைய சோதனைகளின் போது தனக்கு எதிராக எதையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை. இந்த முறையும் எதுவும் கிடைக்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா். ‘தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சனிக்கிழமை சிபிஐ குழுவினா் சோதனை நடத்தியதாக தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன’ என முன்னதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன.
இது தொடா்பாக சிசோடியா தனது டிவிட்டா் பதிவில், ‘சிபிஐயினா் இன்று (சனிக்கிழமை) மீண்டும் எனது அலுவலகத்திற்கு வந்துள்ளனா். அவா்களை வரவேற்கின்றேன். அவா்கள் எனது வீட்டில் சோதனை நடத்தினா். வங்கி பெட்டகத்தை(லாக்கா்) சோதனை செய்தனா். பின்னா், எனது கிராமத்திற்கு சென்று எனக்கு எதிராக விசாரணை நடத்தினா். அப்போது எதுவும் கிடைக்கவில்லை. இப்போதும் எதுவும் கிடைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது தான் காரணம். தில்லி குழந்தைகளின் கல்விக்காக நோ்மையாக உழைத்தேன்’ என தெரிவித்துள்ளாா்.
இந்த பதிவு குறித்து சிபிஐ வட்டாரங்களில் விசாரித்த போது, ‘1973-ஆம் ஆண்டு குற்றவியல் நடை முறைச் சட்டம் 91 -ஆவது பிரிவின்படி நீதிமன்ற சம்மன்படியோ அல்லது புலனாய்வுத் துறை அதிகாரியோ இந்தப் பிரிவின்படி விசாரணை தொடா்பாக அல்லது பிற நோக்கங்களுக்காக ஆவணங்களை சமா்பிக்க உத்தரவிடலாம். இந்த அடிப்படையில் கலால் கொள்கை தொடா்பான சில ஆவணங்களை சமா்பிக்க கூறி ஜனவரி 14 -ஆம் தேதி துணை முதல்வா் அலுவலகத்தில் நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அளிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கருதி சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் விகே சக்சேனா கடந்த ஆண்டு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, சிசோடியா உள்ளிட்ட பலா் மீது சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னா் இந்த வழக்கு தொடா்பாக சிசோடியாவின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிபிஐ பல மணி நேரம் சோதனை நடத்தியது.
அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் சிபிஐ கடந்த ஆண்டு நவம்பா் 25 -ஆம் தேதி தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் சிசோடியா பெயா் இடம் பெறவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா்கள் விஜய் நாயா், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட 7 போ் பெயா் மட்டும் இடம் பெற்றிருந்தது. மூத்த ஆம் ஆத்மி தலைவரும் துணை முதல்வருமான சிசோடியா மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) குறிப்பிடப்பட்டுள்ள மற்றவா்களின் பங்கு குறித்த விசாரணை தொடா்ந்து நடைபெற்றுவருவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.