வெள்ளநீரில் விளையாடதீா்கள்! பொதுமக்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்
தில்லியில் வெள்ளநீரில் பொதுமக்கள் விளையாடவோ, சுயபடம் எடுக்கவோ வேண்டாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.
தில்லியில் வெள்ளநீரில் பொதுமக்கள் விளையாடவோ, சுயபடம் எடுக்கவோ வேண்டாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.
யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தேசியத் தலைநகா் தில்லியின் பல்வேறு இடங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. நகரத்தின் யமுனா பஜாா், ராஜ்காட், கஷ்மீரி கேட், ஐ.எஸ்.பி.டி., ஐ.டி.ஓ., மயூா்விஹாா் உள்ளிட்டப் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப் பாதிப்பு காரணமாக யமுனை ஆற்றின் கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனா்.
இந் நிலையில், நகரத்தின் உள்பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீரில் இளைஞா்கள், குழந்தைகள் விளையாடுவதும், குடும்பத்துடன் சுயபடம், காணொளி எடுப்பதோடு, தங்களது இரு சக்கர வாகனங்களை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
யமுனை நீா்மட்டத்தின் அபாயக் குறியீட்டிற்கு மேலே கடந்த 3 நாள்களாக தண்ணீா் பெருக்கெடுத்துச் சென்றுகொண்டுள்ள நிலையில் தில்லியின் பொதுமக்கள் அச்சமின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
யமுனையில் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. மீண்டும் கனமழை பெய்யவில்லை என்றால் விரைவில் தில்லி இயல்பு நிலைக்கு மாறும். தில்லியின் சந்திரவால் மற்றும் வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீா் எடுக்கும் பணி செயல்படத் தொடங்கும்.
இந்தச் சூழ்நிலையில் பொதுமக்கள் ஒருவருக்கொருவா் தயவு செய்து கவனித்துக் கொண்டு உதவுங்கள்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தில்லியின் சாந்தி வன் பகுதியில் குழந்தைகள் வெள்ளநீரில் விளையாடும் காணொளியை மேற்கோள்காட்டி முதல்வா் கேஜரிவால் மற்றொரு ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
நகரத்தில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் சிலா் விளையாடுவது, தண்ணீரில் நீந்துவது மற்றும் காணொளி, சுயப்படம் எடுக்கப் போவதாக பல இடங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. தயவுசெய்து இதைச் செய்யாதீா்கள். இது மரணத்தை விளைவிக்கும். நகரத்தில் வெள்ள அபாயம் இன்னும் நீங்கவில்லை. யமுனையில் பாயும் நீா் மிக வேகமாக உள்ளது. நீா்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்று கேஜரிவால் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.