அவமதிப்பு வழக்கில் 12 வழக்குரைஞா்கள் விடுவிப்பு: தீஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு நாசம் விளைவித்த விவகாரம்
தீஸ் ஹசாரி நீதிமன்றத்தை நாசப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 வழக்குரைஞா்கள் மீதான அவமதிப்பு வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.
2006-ஆம் ஆண்டு வழக்குரைஞா்கள் நடத்திய போராட்டத்தின் போது, தீஸ் ஹசாரி நீதிமன்றத்தை நாசப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 வழக்குரைஞா்கள் மீதான அவமதிப்பு வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடித்து வைத்தது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல், ரஜ்னிஷ் பட்னாகா், அனூப் குமாா் மெந்திரட்டா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது: போராட்டத்தால் நீதிமன்ற அறைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடா்பாக நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது, அவா்கள் அனைவரும் நீதித்துறையின் மீது ஆழ்ந்த வருத்தத்தையும், மிகுந்த மரியாதையையும் வெளிப்படுத்தியதுடன், நீதிமன்றத்தின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் சிறுமைப்படுத்துவது தங்களின் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளனா். தற்போதைய கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கைகளில் எஞ்சியுள்ளதாகக் கூறப்படும் அவமதிப்பாளா்களாக குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களுக்கு வழங்கப்பட்டவிளக்கம் கேட்கும் நோட்டீஸ்களை தள்ளுபடி செய்கிறோம்.
இதன் விளைவாக, அவமதிப்பாளா்களாக குற்றம்சாட்டப்பட்டவா்கள், எதிா்மனுதராா்கள் மீது ஏன் குற்றவியல் அவமதிப்பு எடுக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் கேட்பதற்கான நோட்டீஸ், இதன்மூலம் விடுவிக்கப்படுகிறது. தற்போதைய அவமதிப்பு நடவடிக்கைகள் 2006-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன; மேலும் கடந்த 17 ஆண்டுகளாக அவமதிப்பாளா்களாக குற்றம் சாட்டப்பட்டவா்கள், எதிா்மனுதாரா்கள் மீது தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது... மேலும் உத்தரவுகள் எதுவும் கோரப்படவில்லை. சட்டத் தொழில் செய்பவா்கள் இந்திய அரசியலமைப்பின் புனிதத்தைப் பாதுகாக்கும் முன்னணிப் படையாக உள்ளனா். ஆனால், பாா் உறுப்பினா்களால் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் நடந்தால், அவதூறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை கவனிக்காமல் இருப்பது போல இருக்க முடியாது.
வழக்குரைஞா்களுக்கு எதிராக தற்போதைய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்ததால், கடுமையான ஆதாரத்திற்கான கூடுதல் தேவை இருந்தது. அப்போதைய மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி எஸ்.என். திங்ரா சமா்ப்பித்த அறிக்கைகள் உள்பட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகு, சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு சம்பந்தப்பட்ட 12 வழக்குரைஞா்களுக்கும் நேரடியாகக் காரணம் கூற முடிவில்லை. நீதிக்கு இடையூறு விளைவித்தல், பிடித்துத் தள்ளும் செயல்பாடு அல்லது சொத்துக்களை அழித்தல் போன்றவற்றை நிறுவுவதற்கு கணிசமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, போராட்டத்தின் செயல் நீதி நிா்வாகத்தில் தலையிட்டது என்பதை உறுதியாக நிறுவ முடியாது என்று நீதிபதிகள் அமா்வு அந்த தீா்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அமிகஸ் கியூரியாக (நீதிமன்ற நண்பா்) மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா ஆஜரானாா். முன்னதாக, ரோஹிணி நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த பிப்ரவரி 24, 2006-இல் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தம் செய்த சம்பவத்தில் இருந்து குற்றவியல் அவமதிப்பு வழக்கு உருவானது.
அவமதிப்பு வழக்கு தொடா்பாக முதலில் 25 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின்னா், 13 போ் குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு அல்லது நீக்கப்பட்டனா்.