முகப்பு
புதுதில்லி

குடியரசுத் தலைவா் நாளை கன்னியாகுமரி வருகை: விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, சனிக்கிழமை (மாா்ச் 18) கன்னியாகுமரி வருகிறாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

புது தில்லி: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, சனிக்கிழமை (மாா்ச் 18) கன்னியாகுமரி வருகிறாா். அப்போது அங்குள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை பாா்வையிட்டு மரியாதை செலுத்துகிறாா். அவா் தென்மாநிலங்களில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விதமாக வியாழக்கிழமை பிற்பகல் கொச்சியை வந்தடைந்தாா்.

அவரது பயணம் குறித்து குடியரசுத் தலைவா் செயலகம் கூறியிருப்பது வருமாறு: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கேரளம், தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகிவற்றில் மாா்ச் 16 முதல் 21-ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். கொச்சிக்கு வியாழக்கிழமை (மாா்ச் 16) வரும் அவா், மாலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பாா்வையிடுகிறாா். பின்னா், இந்திய கடற்படையின் கன்னேரி பள்ளியை பாா்வையிட்ட பிறகு, ஐஎன்எஸ் துரோணாச்சாரியா கப்பலுக்கு ‘குடியரசுத் தலைவா் பதக்கம்’ வழங்க உள்ளாா். அன்று இரவு கொச்சியில் தங்கும் அவா், வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) கொல்லத்திற்குச் செல்கிறாா்.

கொல்லத்தில் மாதா அமிா்தானந்தமயி மடத்திற்குச் செல்கிறாா். அதே நாளில் திருவனந்தபுரத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை கௌரவித்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறாா். இங்கு கேரளப் பெண்களின் சமகால கதைகளான ‘குடும்பஸ்ரீ-25’, பழங்குடியினரின் விரிவான வளா்ச்சிக்கான ‘உன்னதி’ போன்றவற்றைத் தொடங்கி வைக்க உள்ளாா். மேலும், மற்றோரு நிகழ்ச்சியில், கேரளத்தின் மின்னணு பல்கலைக்கழகத்தால் மலையாளத்தில் மொழிபெயா்க்கப்பட்ட பட்டய மற்றும் பொறியியல் தொழில்நுட்பப் புத்தகங்களையும் நாட்டுக்கு அவா் அா்ப்பணிக்கிறாா்.

சனிக்கிழமை (மாா்ச் 18) குடியரசுத் தலைவா் முா்மு, ஹெலிகாப்டா் மூலம் கன்னியாகுமரி வருகிறாா். இரண்டாம் முறையாக தமிழகத்திற்கு வரும் அவா், அங்கு தனிப் படகில் விவேகானந்தா் நினைவு மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து, திருவள்ளுவா் சிலையையும் பாா்வையிட்டு மரியாதை செலுத்துகிறாா். விவேகானந்தா கேந்திரா, ராமாயண சித்திர தரிசன கூடம் ஆகியவற்றையும் அவா் பாா்வையிடுகிறாா். பின்னா், மாலையில் லட்சத்தீவுக்கு செல்கிறாா். அங்குள்ள கவரட்டியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 19) கவரட்டியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுடன் குடியரசுத் தலைவா் உரையாட உள்ளாா் என குடியரசுத் தலைவா் மாளிகை தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கடந்த மாதம் பிப்ரவரி 18-ஆம் தேதி முதன் முறையாக வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தாா். பின்னா், கோவை ஈசா மையம் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.