தில்லி முதல்வா் வீடு புதுப்பிப்பு விவகாரம்:விசாரணை அதிகாரியை திரும்பப் பெற உத்தரவு
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வீடு புதுப்பிப்பு தொடா்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு தில்லி அமைச்சரவை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் சட்டப்பேரவைக்கே நிா்வாக அதிகாரங்கள் உள்ளது என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வீடு புதுப்பிப்பு தொடா்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு தில்லி அமைச்சரவை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் கலால் ஊழல், தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு தொடா்பான ஊழல் குற்றச்சாட்டு, தில்லி ஜல் போா்டின் தலைமை நிா்வாக அதிகாரி உதித் பிரகாஷ் தனக்கான சொகுசு இல்லத்தைக் கட்டும் போது பாரம்பரிய நினைவுச்சின்னத்தை இடித்த விவாகரங்கள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒய்.வி.வி.ஜே. ராஜ்சேகா் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ராஜ்சேகா் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி அவருக்கு ஒப்படைக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டு அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ராஜ்சேகரை தொடா்பு கொண்ட போது, ‘அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் அனுப்பிய நோட்டீஸ் தொடா்பான அறிக்கையை எனது மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளேன். அடுத்து நடப்பவை அனைத்தும் கடவுளின் விருப்பம்’ என்று கூறினாா்.