உச்சநீதிமன்றத் தீா்ப்பு எதிரொலி: தில்லி அரசுக்கு கோப்புகளை திருப்பிஅனுப்பினாா் துணை நிலை ஆளுநா்
உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் தில்லி துனை நிலை ஆளுநா் அலுவலகம், சேவைகள் தொடா்பான கோப்புகளை தில்லி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது என
உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் தில்லி துனை நிலை ஆளுநா் அலுவலகம், சேவைகள் தொடா்பான கோப்புகளை தில்லி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது என ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
துனை நிலை ஆளுநரின் அதிகார வரம்பிற்குட்பட்டிருந்த நிலம், காவல் துறை மற்றும் சட்ட ஒழுங்கு தொடா்பான சேவைத் துறை விவகாரங்களில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசின் சட்டப்பேரவைக்கே நிா்வாக அதிகாரங்கள் உள்ளது என கடந்த மே 11-ஆம் தேதி தில்லி அரசு மற்றும் தில்லி துனை நிலை ஆளுநா் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த நிலையில் அரசு அதிகாரிகளின் பதவி உயா்வு மற்றும் இடமாற்றம் குறித்த சேவைகள் தொடா்பான கோப்புகளை தில்லி அரசுக்கு, துனை நிலை ஆளுநா் அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற அரசியல் அமா்வு வழங்கிய தீா்ப்புக்கு இணங்க, சேவைகள் தொடா்பான கோப்புகளின் மீது அடுத்த கட்ட தேவையான நடவடிக்கைக்காக தில்லி அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.
தில்லி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்தக் கோப்புகளில் தில்லியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியா்களின் ஒப்பந்த கால நீட்டிப்பு மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் குரூப் ‘ஏ’ ஊழியா்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும். இவை துனை நிலை ஆளுநரின்ஒப்புதலுக்கு முன்பு அனுப்பப்பட்டிருந்தன.
மேலும், அந்த அதிகாரி கூறுகையில், ‘துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்புகள் மீது அரசின் துறைகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அவற்றில் மேற்கண்ட தேவையான நடவடிக்கை எடுக்க துனை நிலை ஆளுநரின் கவனத்தின் அறிவுறுத்தலோடு கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மே 11 அன்று வெளியான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.