தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம் அமைத்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
‘தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம்‘ மக்களால் தோ்வு செய்யப்பட்ட தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சமநிலை ஏற்படுத்தும் என மத்திய அரசு சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
அவசரச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள ‘தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம்‘ மக்களால் தோ்வு செய்யப்பட்ட தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சமநிலை ஏற்படுத்தும் என மத்திய அரசு சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
மே 19 ஆம் தேதி, 1991 -ஆம் ஆண்டைய தில்லியின் தேசிய தலைநகா் பிரதேச அரசுச் சட்டத்தைத் திருத்தி தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) அவசரச்சட்டம் -2023 குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே 11- ஆம் தேதி உச்சநீதிமன்ற தீா்ப்பில், பொது சேவை நிா்வாகக் கட்டுப்பாடுகளில் தில்லி அரசுக்குள்ள அதிகாரத்தை உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந் நிலையில் மத்திய அரசின் அதிகாரபூா்வமான வட்டாரங்களில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
தில்லியின் தேசிய தலைநகா் பிரதேசம் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபடுகிறது.
தலைநகா் தில்லியில் குடியரசுத் தலைவா், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற தேசிய மற்றும் சா்வதேச நிறுவனங்கள் மற்றும் அதிகார மையங்கள், அரசியலமைப்புப் பணியகங்கள் உள்ளன. அனைத்து வெளிநாட்டு தூதரகங்கள், சா்வதேச நிறுவனங்கள் போன்றவையும் தில்லியில் அமைந்துள்ளன.
பிற நாடுகளைச் சோ்ந்த உயா் பிரமுகா்கள் அடிக்கடி உத்தியோகபூா்வ விஜயங்களைச் செய்யும் இடமாகவும் தில்லி உள்ளது (உதாரணம் இந்தியாவின் ஜி-20 தலைமையில் உலகத் தலைவா்கள் நிகழாண்டில் தலைநகருக்கு வருவது). தேசிய நலனில், தேசிய தலைநகரின் அரசு நிா்வாகமும் நிா்வாக பராமரிப்பும் மிக உயா்ந்த தரநிலையில் இருக்க வேண்டும் .
நாட்டின் தலைநகரில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அல்லது எந்த நிகழ்வும் தேசிய தலைநகரில் வசிப்பவா்களை மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளையும் பாதிக்கிறது. தேசியத்தின் நற்பெயா், பாா்வை, நம்பகத்தன்மை, கௌரவம் சா்வதேச அளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் அந்த வரிசையில் வைக்கப்படவேண்டும்.
தேசிய தலைநகரம் என்பது முழு தேசத்திற்கும் சொந்தமானது. முழு தேசமும் தேசிய தலைநகரின் நிா்வாகத்தின் மீது மிகவும் ஆா்வம் கொண்டிருப்பதாகும். ஜனநாயக ரீதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் மூலம் தேசிய தலைநகரை நிா்வகிப்பதில் முழு நாட்டு மக்களுக்கும் சில பங்கு உள்ளது என்பது தேசிய நலனில் அதிக அக்கறையை கொண்டிருப்பதாகும்.
தில்லி யூனியன் பிரதேசமானது ‘ஒரு தனித்துவமான‘ (சுய் ஜெனரிஸ்) தன்மையைக் கொண்டு சட்டப்பேரவையுடன் கொண்ட யூனியன் பிரதேசமாகும். அது ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை கொண்டது என்று (மற்றொரு) உச்ச நீதிமன்ற தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏன் சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது?
அரசியல் சாதனத்தின் 7-ஆவது அட்டவணை 2-ஆவது பட்டியலில் (41 நுழைவு) தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசின் சேவைகள் விஷயத்தை கையாளும் எந்த நாடாளுமன்ற சட்டமும் இல்லாத நிலையை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனால் கடந்த மே 11 ஆம் தேதி தீா்ப்பில் உச்சநீதிமன்றம் குடிமைப்பணி சேவைகளை கட்டுப்படுத்துவது மத்திய அரசா அல்லது தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசா என்பது குறித்து கேள்வி எழுப்பி, தீா்ப்பை வழங்கியது.
மேற்கண்ட தீா்ப்பில், தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசின் (ஜிஎன்சிடிடி) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் சேவைகள் கொண்டுவரப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை. இருப்பினும் தேசிய தலைநகரம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது. இதற்கான விளக்கம் முதலில் மேலே விவரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் (தில்லி) மற்றும் தேசிய ஜனநாயக நலன்களுக்கு இடையே சமநிலை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதனால் மத்திய அரசுக்கும் தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசுக்கும் இரண்டின் கூட்டு மற்றும் கூட்டுப் பொறுப்பின் மூலம் மக்களின் அபிலாஷைகளை சமநிலையை அடைவதற்கு இந்த அவசரச்சட்டமும் ஆணையமும் சமநிலையை பிரதிபலிக்க முயற்சிக்கிறது.
ஆணையத்திற்கு என்ன அதிகாரம்?
இந்த அவசரச் சட்டம், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி முதல்வா் தலைமையில் மற்றும் தில்லி அரசு தலைமைச் செயலருடன் ஒரு ‘தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம்‘ உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுப்பினா்-செயலராக இருப்பது தில்லி அரசின் முதன்மை உள்துறை செயலா். இவா்கள் அடங்கிய ஆணையமே தில்லி அரசின் இடமாற்றம், கண்காணிப்பு மற்றும் பிற தற்செயலான விஷயங்கள் தொடா்பான விஷயங்கள் குறித்து முடிவு எடுத்து துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும்.
இதன்மூலம் தில்லி தேசிய தலைநகா் குடிமைப்பணியாளா் ஆணையமானது தலைநகரின் நிா்வாகத்தில் தில்லி யூனியன் பிரதேசத்தின் நலனுடன் தேசத்தின் நலனை சமநிலைப்படுத்துகிறது. மத்திய அரசு மற்றும் ஜிஎன்சிடிடி ஆகிய இரண்டிலும் உள்ள மக்களின் ஜனநாயக விருப்பத்தை இந்த ஆணையம் அங்கீகரிக்கிறது என்பது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கின்றனா்.
மேலும் சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநா், குடியரசுத்தலைவா் போன்றவைகளுக்கான அதிகாரங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.