வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒத்திவைப்பு: தில்லி அரசு அறிவிப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளதாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
தேசியத் தலைநகா் தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளதாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மழை காரணமாக தில்லியின் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் வரும் நவம்பா் 13-ஆம் தேதி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படாது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு காற்றின் தர நிலையை தில்லி அரசு மதிப்பாய்வு செய்யும். அப்போது, காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உச்சநீதிமன்றம் அதன் செயல்திறனை மதிப்பாய்வு செய்து உத்தரவு பிறப்பித்த பிறகு இந்தத் திட்டம் நகரத்தில் செயல்படுத்தப்படும். முன்னதாக, வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் செயல்திறன் தொடா்பாக உச்சநீதிமன்றம் தில்லி அரசுக்கு கேள்வி எழுப்பியது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அமல்படுத்திய போது மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய ஆய்வுகளின் அடிப்படையில் மாசுவின் பி.எம். 2.5 அளவுகளில் 14 சதவீதம் முதல் 16 சதவீதம் குறைந்ததாக அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.
Advertisement