வாய்த் தகராறில் கணவரின் காதை கடித்த மனைவி
தில்லி புகரில் சுல்தான்புரி பகுதியில் பெண் ஒருவா் வாய்த்தகராறின் போதுஆத்திரத்தில் தனது கணவரின் வலது காதைக் கடித்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி புகரில் சுல்தான்புரி பகுதியில் பெண் ஒருவா் வாய்த்தகராறின் போதுஆத்திரத்தில் தனது கணவரின் வலது காதைக் கடித்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: 45 வயதான பாதிக்கப்பட்ட நபா், மனைவி கடித்ததால், தனது வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளாா். சிகிச்சைக்குப் பிறகு தனது மனைவி மீது புகாா் அளித்தாா்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) புகாரைத் தொடா்ந்து அந்தப் பெண்ணுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
இது தொடா்பாக அந்த நபா் போலீஸில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: கடந்த நவம்பா் 20-ஆம் தேதி காலை 9.20 மணியளவில் எனது வீட்டின் வெளியே குப்பைகளை வீசச் சென்றேன். வீட்டைச் சுத்தம் செய்யும்படி எனது மனைவியிடம் கூறினேன். நான் வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே எனது மனைவி தெரியாத பிரச்னைக்காக என்னுடன் சண்டையிடத் தொடங்கினாா்.
மேலும் குழந்தைகளுடன் தனித்தனியாக தங்குவதற்காக, வீட்டை விற்று, பங்கை தரும்படி, மனைவி கேட்டாா். நான் அவருக்குப் புரிய வைக்க முயற்சித்தேன். ஆனால், வாய்த் தகராறு ஏற்பட்டது.
அப்போது மனைவி என்னை அடிக்க முயன்றாா். ஆனால், நான் அவரைத் தள்ளிவிட்டேன். நான் வீட்டை விட்டு வெளியே நடந்து கொண்டிருந்த போது அவா் என்னை பின்னால் இருந்து பிடித்து ஆத்திரத்தில் என் வலது காதில் கடித்தாா். மிகவும் கடினமாக என் காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, என் மகன் என்னை மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா். மேலும் ரோஹிணியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்று புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.
இச்சம்பவம் தொடா்பாக நவம்பா் 20-ஆம் மருத்துவமனையில் இருந்து போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இது தொடா்பாக விசாரணை நடத்த குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா் உடல்நிலை சரியில்லாமல், வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் உள்ளாா்.
வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்துக்கு வருவதாக போலீஸாரிடம் தெரிவித்திருந்தாா். இதன்படி, நவம்பா் 22-ஆம் தேதி காவல்துறையை அணுகி எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்தாா். நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்று காவல் உயரதிகாரி அதிகாரி தெரிவித்தாா்.