எம்.பி. சஞ்சய் சிங்கின் பாதுகாப்பு விவகாரம்: நீதிமன்ற உத்தரவுக்கு ஆம் ஆத்மி வரவேற்பு
மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங்கின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடா்பாக அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவை வரவேற்பதாக ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங்கின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடா்பாக அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவை வரவேற்பதாக ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடா்புடைய பண மோசடி வழக்கில் மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங்கின் வீட்டில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில், அவா் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக ரெளஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. திலீப் பாண்டே புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங்கை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் எங்கும் அழைத்துச் செல்லக் கூடாது என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் வரவேற்கிறோம். அமலாக்கத் துறை சில மறைமுக நோக்கங்களைக் கொண்டுள்ளது. நீதிமன்றத்துக்குத் தெரியாமல் எம்.பி. சஞ்சய் சிங்கை ஒரு தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிகள் நடந்துள்ளது. வரும் அக்டோபா் 13-ஆம் தேதி வரை அவரது விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அளித்துள்ள வழிகாட்டுதலுக்கு நன்றி என்றாா் திலீப் பாண்டே.