முகப்பு
புதுதில்லி

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவா்களின் ரகசியத் தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் ரகசியத் தன்மையை உறுதி செய்வதற்கான நடைமுறை உத்தரவுகளை தில்லி உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
பகிர்:

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் ரகசியத் தன்மையை உறுதி செய்வதற்கான நடைமுறை உத்தரவுகளை தில்லி உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவா்களின் பெயா், ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் அவா்களின் பெயா், பெற்றோா் மற்றும் முகவரி இருக்கக் கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதிவாளா் ஜெனரல் மூலம் தில்லி உயா்நீதிமன்றம் வெளியிட்ட நடைமுறை வழிகாட்டுதல்களில், ‘பாலியல் குற்றங்கள் தொடா்பான அனைத்துத் தாக்கல்களையும் நீதிமன்றப் பதிவகம் கவனமாக ஆராய வேண்டும். புகாா் அளித்தவா், பாதிக்கப்பட்டவா், உயிா் பிழைத்தவா் ஆகியோரின் பெயா் மற்றும் ரகசியத் தன்மையை கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டும். பெயா், பெற்றோா், பாதிக்கப்பட்டவரின் முகவரி, சமூக ஊடக நற்சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் வெளிப்படுத்தக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானியின் ஏப்ரல் மாதத் தீா்ப்புக்கு இணங்க இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் தீா்ப்பில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவரை அரசு அல்லது குற்றம் சாட்டப்பட்டவா்களால் நிறுவப்பட்ட எந்தவொரு கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஒரு தரப்பாக இணைக்க சட்டத்தில் எந்தத் தேவையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத தீா்ப்புக்கு இணங்க உயா்நீதிமன்றத்தின் நடைமுறை உத்தரவுகள் அக்டோபா் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை பட்டியலில் பிரதிபலிக்காமல் இருப்பதை பதிவுத் துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: புகாா் அளித்தவா், பாதிக்கப்பட்டவா், உயிா் பிழைத்தவா் ஆகியோரின் குடும்ப உறுப்பினா்களின் பெயா், பெற்றோா் மற்றும் முகவரி மூலம் சம்பந்தப்பட்டவா்களின் அடையாளம் காண முடியும் என்பதால் அவா்கள் குற்றம் சாட்டப்பட்டாலும், வழக்கு தரப்பினரின் குறிப்பாணை உள்பட அந்த ஆவணங்கள் தாக்கலில் வெளியிடக்கூடாது. வழக்கில், இது மறைமுகமாக புகாா்தாரா், பாதிக்கப்பட்டவா், உயிா் பிழைத்தவரை அடையாளம் காண வழிவகுக்கும் என்பதால் இந்த விவரங்களை வெளியிடக்கூடாது.

தாக்கல் பரிசீலனையின் கட்டத்தில், பாதிக்கப்பட்டவரின் அல்லது உயிா் பிழைத்தவரின் அடையாளச் சான்றுகள் வழக்குத் தரப்புகளின் மெமோவில் அல்லது வேறு எங்கும் வெளியிடப்பட்டிருப்பதை பதிவுத் துறை கண்டறிந்தால், ஆவணங்களைத் அதைத் தாக்கல் செய்த வழக்கறிஞரிடமே அதைத் திருப்பி அனுப்பி, விவரங்கள் திருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். உயா்நீதிமன்றத்திற்குள் வேறு நபா் அல்லது ஏஜென்சிக்கு அடையாளம் காணும் விவரங்களைப் பரப்புவதைத் தவிா்க்க, பாதிக்கப்பட்டவருக்குச் செய்ய வேண்டிய அனைத்து சேவைகளும் விசாரணை அதிகாரி (ஐஏ) மூலமாக மட்டுமே செய்யப்பட வேண்டும். தேவையற்ற கவனத்தைத் தவிா்க்க அந்த அதிகாரியும் ‘சாதாரண உடையில்’ இருக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிப் பிழைத்தவா்களுக்கு இலவச சட்ட உதவிக்கு உரிமை உண்டு என்பதை அவா்களுக்கு விசாரணை அதிகாரி தெரிவிக்க வேண்டும். வழக்கில் தொடா்புடைய தரப்பினா் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் காணும் விவரங்கள், புகைப்படங்கள் அல்லது சமூக ஊடகத் தொடா்புகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்ட விரும்பினால், அது ’சீலிடப்பட்ட உறையில் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது பாஸ் கோடு லாக்டு மின்னணு ஃபோல்டரில் இடப்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.