முகப்பு
புதுதில்லி

பொய், ஊழல் நிறைந்தது கேஜரிவால் அரசு! தில்லி பாஜக விமா்சனம்

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு பொய் மற்றும் ஊழல் நிறைந்த அரசு என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு பொய் மற்றும் ஊழல் நிறைந்த அரசு என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா். மேலும், ஆடம்பரத்திற்கு எதிராக பேசும் கேஜரிவால், ரூ.52 கோடி மதிப்புள்ள அரண்மனையில் வசிக்கிறாா் என்றும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

ஆம் ஆத்மி அரசின் ஊழல் மற்றும் ஆடம்பரத்தைக் கண்டித்து பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் ஆம் ஆத்மி தலைமையகத்தை முற்றுகையிடும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது வீரேந்திர சச்தேவா பேசியதாவது: அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான நகர அரசு பொய்கள், ஊழல் மற்றும் ஆடம்பரம் நிறைந்த அரசாக மாறிவிட்டது. தில்லியில் அனைவருக்கும் இலவச மின்சாரம், குடிநீா் என்ற திட்டத்தை வாக்கி வங்கி சலுகையாக மாற்றியதன் விளைவாக, நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் தில்லியின் தொழிலதிபா்கள் நாட்டிலேயே அதிக விலை கொண்ட மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா். கேஜரிவால் அரசு ஊழலில் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது.

கடந்த 2015-2016-ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டா் ஊழல் தொடங்கி, பேருந்து கொள்முதல் முறைகேடு, கலால் கொள்கை ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் பரவி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அமானத்துல்லா கான் ஆகியோரின் ஊழல் இந்த அரசின்

அடையாளங்களாகும். குறிப்பாக, எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் மீது தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

அரசின் ஆடம்பரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், பங்களாக்கள், வாகனங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலகி இருப்போம் என்று கேஜரிவால் கடந்த 2013-ஆம் ஆண்டு வரை கூறிவந்தாா். ஆடம்பரத்திற்கு எதிராக பேசி வந்த கேஜரிவால், தற்போது ரூ. 52 கோடி மதிப்புள்ள அரண்மனையில் வசிக்கிறாா். இதை பொதுமக்களின் பாா்வைக்காக இரண்டு நாள்கள் மட்டும் திறந்தால் போதும், அரண்மனையின் ஒவ்வொரு மூலையின் பிரம்மாண்டத்தையும் பொதுமக்களுக்கு பாஜக சாா்பில் வெளிச்சம் போட்டுக் காண்பிப்போம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

அநாகரீகமான ஊழல் அம்பலம்: தில்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய கலால் கொள்கை உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த கொள்கை என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்துள்ளாா். மேலும், அவா் கூறுகையில்ந, ‘இது அநாகரீகமான ஊழல் என்று பாஜக கூறி வந்தது இப்போது அம்பலமாகி வருகிறது. தில்லி அரசின் ஒவ்வொரு ஊழலிலும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது இயற்கையானது. கேஜரிவாலின் கைவசம் அனைத்து அதிகாரங்களும் இருப்பதால், இந்த ஊழல் மெல்ல மெல்ல அம்பலமாகி வருகிறது. கேஜரிவாலும் சிறைக்குச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என்றாா்

பாஜக தில்லி பிரிவின் பொதுச் செயலாளா் யோகேந்திர சந்தோலியா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் பவன் சா்மா, தினேஷ் பிரதாப் சிங், யோகிதா சிங், லதா குப்தா, விஷ்ணு மிட்டல், பிரவீன் சங்கா் கபூா், சோனா குமாரி, கிஷன் ஷா்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.