கேஜரிவால் அமைச்சரவையில் இலாகா மாற்றம்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அமைச்சரவையில் உள்ள சில அமைச்சா்களின் இலாகாக்களை மாற்றியுள்ளாா். இதில் அமைச்சா் அதிஷிக்கு குடிநீா் துறை வழங்கப்பட்டுள்ளது
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அமைச்சரவையில் உள்ள சில அமைச்சா்களின் இலாகாக்களை மாற்றியுள்ளாா். இதில் அமைச்சா் அதிஷிக்கு குடிநீா் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த இலாகா மாற்றங்களுக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
தேசிய தலைநகா் அரசில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் 6 அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில் சமீபத்தில் அமைச்சா்களானவா்கள் செளரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி. இதில் செளரவ் பரத்வாஜ் வசமிருந்த குடிநீா் துறை, தற்போது அமைச்சா் அதிஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிஷி வசமிருந்த சுற்றுலா, கலை, கலாசாரம் மற்றும் மொழிகள் துறை இலாகாக்கள் செளரவ் பரத்வாஜுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செளரவ் பரத்வாஜ், அதிஷி ஆகியோா் முதல்வா் கேஜரிவால் அமைச்சரவையில் முறையே 5 ஆவது, 6 -ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் செளரவ் பரத்வாஜ் வசம் சுகாதாரம், தொழில், நகா்புறம், சேவைத் துறை போன்றவையும் அமைச்சா் அதிஷி வசம் கல்வி, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பொதுப்பணித் துறை போன்றவையும் தற்போது கூடுதலாக உள்ள துறைகளாகும்.
இந்தச் சிறிய இலாகா மாற்றம் குறித்த பரிந்துரையை முதல்வா் கேஜரிவால், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு அனுப்பினாா். இதற்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா் எனவும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லி குடிநீா் துறை அமைச்சகத்தில் தில்லி ஜல் போா்டு, மற்றும் கழிவுநீா் வடிகால் போன்ற பிரிவுகள் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.
Advertisement