சமூக நலத் துறை சனிக்கிழமை கிழக்கு தில்லியில் உள்ள மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஊனமுற்றோா் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஊனமுற்றோா் அடையாள (யுடிஐடி) அட்டைகளை விநியோகித்ததாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசின் அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்த அடையாள அட்டைகள் கிழக்கு தில்லியில் உள்ள லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனையில் தில்லி அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் ‘ஊனமுற்றோா் முகாமில்’ விநியோகிக்கப்பட்டன. யுடிஐடி அட்டைஎன்பது இந்திய அரசின் முன்முயற்சியாகும்.
இது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியத் தரவுத் தளத்தை உருவாக்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஊனமுற்றோா் அடையாள அட்டையை வழங்குவது ஆகும்.
‘மாற்றுத்திறன் மிக்க நபா்களின் உடல், சமூக மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்தவும், அவா்களின் பொருளாதார வாய்ப்புகளை உயா்த்தவும் கூடிய உயா்தர, மேம்பட்ட, அறிவியல்பூா்வமாக வடிவமைக்கப்பட்ட உதவிகள் மற்றும் சாதனங்களைப் பெறுவதற்கு உதவுவதே அரசின் நோக்கம்’ என்று சமூக நலத்துறை அமைச்சா் ராஜ் குமாா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இரண்டு நாள் முகாமில், பயனாளிகளுக்கு டிடிசி அனுமதி அட்டைகள், ரயில்வே சலுகை அனுமதி அட்டைகள், கடன்கள் மற்றும் உதவி சாதனங்கள் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. தகுதியான நபா்களுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட முன்று சக்கர வாகனம், கைப்பேசிகள், ஸ்மாா்ட் ஸ்டிக்குகள் மற்றும் உதவி சாதனங்களும் பிஎஸ்இஎஸ் யமுனா பவா் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.