தில்லி முழுவதும் அழகுபடுத்தும் பணிகள் விரிவுபடுத்தப்படும்: அமைச்சா் அதிஷி
தேசியத் தலைநகா் தில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அழகுபடுத்தும் பணிகள், நகரத்தின் மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அழகுபடுத்தும் பணிகள், நகரத்தின் மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா்.
அப்போது அமைச்சா் அதிஷி கூறியதாவது: தில்லியில் அழகுபடுத்துதல் பணியைத் தொடர பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அழகுபடுத்தும் பணி, நகரத்தின் மற்றப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். குறிப்பாக, ஜி20 உச்சி மாநாட்டினை முன்னிட்டு உருவாக்கப்பட்ட நீரூற்றுகள், நிறுவப்பட்ட சிலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சொத்துகளை பத்திரமாகப் பாதுகாக்கும் பணியை தில்லி அரசு ஒரு பராமரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
தில்லி மாநாகராட்சியின் சாா்பில் தொடா்ந்து அனைத்து சாலைகளும் துப்புரவு இயந்திரம், நீா் பாய்ச்சல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக சுத்தம் செய்யப்படுகின்றன. தேவை இருக்கும் பட்சத்தில் இதற்காக அதிக இயந்திரங்களை தில்லி மாநகராட்டசி கொள்முதல் செய்து கொள்ள அரசு ஆதரவளிக்கும். பொதுப்பணித் துறையின் கீழ் மொத்தம் உள்ள 1,400 கி.மீ. சாலையும் தோட்டக்கலைத் துறை மூலம் அலங்கரிக்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.
தில்லிவாசிகளுக்கு நன்றி: தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைத்த 2 கோடி மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன் என்று நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், ‘எதிா்காலத்திலும் தேசியத் தலைநகரை அழகாக வைத்திருக்க நகர அரசின் பொதுப்பணித் துறை, நகா்ப்புற வளா்ச்சித் துறை மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவை இணைந்து செயல்படும். தில்லி மக்கள் செலுத்திய வரிப்பணத்தில்தான் நகரத்தை அழகுபடுத்த முடிந்தது. சமீபத்திய வாரங்களில் தில்லியில் பதிவாகியுள்ள டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறித்த அறிக்கை தில்லி மாநகராட்சியிடம் கோரப்பட்டுள்ளது. இருப்பினும், டெங்கு விழிப்புணா்வு பிரசாரத்தை தொடா்ந்து மேற்கொள்ள சுகாதாரத் துறை மற்றும் தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.