பாஜக அரசின் கீழ் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சிகள்: மமதா குற்றச்சாட்டு!
முதலில் வாக்குரிமை அடுத்து குடியுரிமை பறிப்பதாக மமதா குற்றச்சாட்டு..
ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் அரசியலமைப்பு நிறுவனங்களை பாஜக, மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவை தவறாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு வங்காளத்தின் மைனாகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மமதா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
பாஜக தலைமையிலான மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் வாக்குரிமையைப் பறித்து வருவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை(என்ஆர்சி) அமல்படுத்துவன் மூலம் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சிகள் அடுத்தகட்டமாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) எனும் செயல்முறையின் மூலம் குறிப்பிட்ட சமூகங்கள் தேர்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எஸ்ஐஆர் செயல்முறையின் மூலம் ராஜ்வன்ஷி சமூகத்தினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு வருகின்றன. எஸ்ஐஆர் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று வாக்குரிமையைப் பறிக்கிறார்கள், நாளை தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவந்து குடியுரிமையைப் பறிப்பார்கள்.