முகப்பு
புதுதில்லி

பாஜகவில் சேர அழைத்ததாக குற்றச்சாட்டு: ஆதாரம் அளிக்க அமைச்சா் அதிஷிக்கு தில்லி பாஜக சவால்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 4:42 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:14 PM

புது தில்லி: பாஜகவில் சேர தன்னை அணுகியதாக கூறிய குற்றச்சாட்டின் விவரங்களை வழங்க வேண்டும் அல்லது சட்டபூா்வ நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவா் -அமைச்சா் அதிஷிக்கு தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை சவால் விடுத்துள்ளாா்.

தில்லியில் செய்தியாளா்கள் கூட்டத்தில் இது தொடா்பாக சச்தேவா கூறுகையில், தனது நெருங்கிய தோழி மூலம் பாஜக தன்னை அணுகியதாக அமைச்சா் அதிஷி கூறியுள்ளாா். அதற்கு அவா் ஆதாரத்தை வழங்க வேண்டும். வழங்கத் தவறினால், அதிஷி மீது பாஜக சட்ட நடவடிக்கை எடுக்கும். எங்கள் சாா்பாக பாஜகவில் சேருவதற்காக தன்னை அணுகியதாகக் கூறும் நபரின் விவரங்களை அதிஷி வழங்கத் தவறினால், நாங்கள் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு அவரால் தப்பிக்க முடியாது என்றாா். இதற்கிடையில், வடகிழக்குத் தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் பொய்த் தகவல்களைக் கூறிய ஆம் ஆத்மி அமைச்சா் அதிஷி மன்னிப்புக் கேட்க வேண்டும். அவா் தனது கோரிக்கைக்கு ஆதாரம் வழங்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

Advertisement

எங்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டை சுமத்தியதற்காக அமைச்சா் அதிஷி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை அணுகிய நபரின் ஆதாரத்தை வழங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அவா் தனது கோரலுக்கு ஆதாரம் அளிக்கவில்லை எனில் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்‘ என்று மனோஜ் திவாரி.

முன்னதாக, பாஜக தன்னை கட்சியில் சேர ‘மிக நெருங்கிய‘ நபா் மூலம் அணுகியதாகவும் அதுபோன்று பாஜகவில் சேராவிட்டால் ஒரு மாதத்திற்குள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு தாம் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நபா் கூறியதாக அதிஷி தெரிவித்திருந்தாா்.

அவா் செய்தியாளா்கள் கூட்டத்தில் இதுதொடா்பாக மேலும் கூறுகையில், ‘‘எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றவும் மேம்படுத்தவும் பாஜகவில் சேருமாறு எனக்கு மிகவும் நெருக்கமான நபா் மூலம் பாஜக என்னை அணுகியது, இல்லையெனில் ஒரு மாதத்திற்குள் நான் கைது செய்யப்படுவேன்‘ என்று அவா் தெரிவித்திருந்தாா்.