தேயிலை பழங்குடியினரை வாக்கு வாங்கியாகப் பயன்படுத்தும் காங்கிரஸ்: நட்டா குற்றச்சாட்டு!
டும்டுமா தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜெ.பி. நட்டா பிரசாரம்...
தேயிலைத் தோட்டப் பழங்குடியினரின் நலனுக்காகப் பணியாற்றாமல், அவர்களை வாக்கு வங்கியாகக் கருதி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அறுவடை செய்வதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
அஸ்ஸாமில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தலைவர்கள் பலரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பாஜகவின் டும்டுமா தொகுதி வேட்பாளர் ரூபேஷ் கோவாலாவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நட்டா உரையாற்றினார்.
Advertisement
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஊடுருவல்காரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்ததாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தேயிலைத் தோட்டப் பழங்குடியினரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அறுவடை செய்யக்கூடிய ஒரு வாக்கு வங்கியாகவே கருதுகிறது. அது அந்தச் சமூகத்தின் எதிர்காலத்தை இருளில் தள்ளியது.
ஊடுருவல்காரரகளை அஸ்ஸாமிற்கு அழைத்துவந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததுடன், திருப்திப்படுத்தும் அரசியலுக்காக அவர்களுக்கு ஆதார் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளையும் வழங்கியது.
இந்த ஊடுருவல்காரர்கள் ஆதிவாசிகளுக்கும், ஏழை மக்களுக்கும் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த நிலங்களை மீட்டு சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும்.
வாக்காளர் பட்டியலிலிருந்து இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. பட்டியலில் எஞ்சியுள்ளவர்களின் பெயர்களும் விரைவில் நீக்கப்படும்.
கிழக்கு அஸ்ஸாமில் அமைந்துள்ள இத்தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தேயிலைத் தோட்டப் பழங்குடியினர், ஊடுருவல்காரர்களுக்கு எதிராக எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டிற்காக நட்டா அவர்களைப் பாராட்டினார்.
ஊடுருவல்காரர்கள் குடியேறுவதை அனுமதிக்காமல் தடுத்து, அதன் மூலம் பாரத மாதாவின் எதிர்காலத்தைக் காப்பாற்றிய தேயிலைத் தோட்டப் பழங்குடியின மக்களுக்கு நான் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில் வன்முறை, கொலைகள், வேலைநிறுத்தங்கள், அமைதியின்மை மற்றும் ஊரடங்குச் சூழல் நிலவியது. கடந்த பத்தாண்டுகளில் பாஜக தலைமையிலான அரசு அஸ்ஸாமில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்தது.
மாநிலத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட நட்டா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் என்று உறுதியளித்தார்.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா மக்களைக் கேட்டுக்கொண்டார்.