தில்லி விமான நிலையத்தில் அணுகுண்டு மிரட்டல்: இரு பயணிகள் கைது!
பாதுகாப்பு சோதனையின் போது அணுகுண்டு வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி எழுப்பிய இரண்டு இளைஞர்கள்.
புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அணுகுண்டு மிரட்டல் விடுத்த இரு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
தில்லியில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த ஆகாசா விமானத்தில் பயணிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மலான், கஷ்யப் குமார் ஆகிய இருவர் வந்துள்ளனர்.
அவர்களை விமான ஏறுவதற்கு முன்னதாக ஆகாசா விமான நிர்வாகத்தை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாம் கட்ட சோதனை செய்துள்ளனர்.
அப்போது பாதுகாவலரிடம், ஏற்கெனவே சோதனை செய்துவிட்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர். அதற்கு பாதுகாவலர்கள், இது எங்களின் வழக்கமான சோதனைதான் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ”நான் அணுகுண்டு எடுத்து வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என்று ஒருவர் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த பாதுகாவலர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.