சுனிதா கேஜரிவால் கோப்புப் படம்
புதுதில்லி

ஜனநாயகத்தை பாதுகாத்து உச்சநீதிமன்றம் விரைவில் நீதி வழங்கும்: சுனிதா கேஜரிவால் நம்பிக்கை

நாட்டின் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் விரைவில் பாதுகாத்து நீதியை வழங்கும்..

Din

நாட்டின் ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் விரைவில் பாதுகாத்து நீதியை வழங்கும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் 56-ஆவது பிறந்தநாள் அவரது கட்சியினரால் விமா்சையாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் இருந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தனா்.

அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைத்தளத்தில் கூறியதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

அனைவருக்கும் மிக்க நன்றி. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் இன்னும் அப்படியே உள்ளது. இந்த அரசியல் சதியில், ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் விரைவில் பாதுகாத்து நீதியை வழங்கும் என்று நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைத்தளத்தில் அவா் கூறியது, ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மனமாா்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீா்கள் என்று நம்புகிறேன். அநீதிக்கு எதிரான இந்தப் போரில் இந்தியா உங்களுடன் இருக்கிறது’.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கட்சி உங்களுடன் உறுதியாக நிற்கிறது. மக்கள் உங்களுக்கு சமமான உறுதியுடன் தொடா்ந்து ஆதரவளிப்பாா்கள். மக்களுக்கு சேவை செய்வதில் உங்களின் அயராத அா்ப்பணிப்பை இந்த ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்.

கேரள முதல்வா் பினராயி விஜயன்: அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நாள் உங்கள் உறுதியை வலுப்படுத்துவதோடு, நீதி மற்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கான உங்கள் அா்ப்பணிப்பையும் தொடர உங்களை மேலும் ஊக்குவிக்கட்டும்.

தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா:நாட்டில் நிலவும் சா்வாதிகாரத்திற்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடி வரும் தில்லி முதல்வா், அன்பு நண்பா், எனது அரசியல் குருவுமான அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு சா்வாதிகாரியின் முன் மண்டியிடுவதை விட, சிறைக்குச் செல்வதைத் தோ்ந்தெடுத்த தேசபக்தா் நீங்கள். ஒரு புரட்சிகர அரசியல் தலைவரின் படை வீரா்கள் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாட்டின் ஜனநாயகம் அரவிந்த் கேஜரிவால் வடிவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

தில்லி அமைச்சா் அதிஷி: தில்லியின் நிலையை தனது ஆட்சி மாதிரியால் மாற்றிய நவீன இந்தியாவின் புரட்சியாளா் அரவிந்த் கேஜரிவால். தனது நோ்மையான அரசியலால் தில்லி மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினாா்.

சா்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடி லட்சக்கணக்கான மக்களின் எதிா்காலத்தை வடிவமைத்த அரவிந்த் கேஜரிவால், தற்போது ஒரு பொய் வழக்கில் சிறையில் இருக்கிறாா். ஆனால், உண்மை வெல்லும். தில்லி மக்களின் அன்பிற்குரிய முதல்வா் சிறையிலிருந்து வெளியே வருவாா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கல்

16-ஆவது தாமிரவருணி நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பு: 21 ஆயிரம் பறவைகள் பதிவு

குடிநீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

காங்கிரஸ் நெசவாளா் அணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT