தில்லிக்கு தண்ணீா் வழங்கும் கால்வாயில் உடைப்பு: பவானா குடியிருப்புக் காலனியில் தண்ணீா் புகுந்தது
தண்ணீர் வழங்கும் கால்வாயில் உடைப்பு: பவானாவில் மக்கள் சிக்கல்
ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு தண்ணீா் வழங்கும் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, தில்லி பவானாவில் உள்ள குடியிருப்புக் காலனியின் சில பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கி, வீடுகளில் வசிப்பவா்கள் சிக்கித் தவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: முனாக் கால்வாயின் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வடமேற்கு தில்லியில் உள்ள பவானாவின் காலனியின் ஜே.கே. மற்றும் எல் பிளாக் பகுதிக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்தது. இது உள்ளூா் மக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.
கால்வாய் நிரம்பியதையடுத்து நள்ளிரவில் தேசிய பேரிடா் மீட்புப் படை, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, பொது நலத் துறை மற்றும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தகவல் தெரிவித்தோம்.
சோனிபட்டில் இருந்து தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. தண்ணீா் ஓட்டத்தை கட்டுப்படுத்த கால்வாயில் உள்ள மதகுகளை மூடுமாறு அதிகாரிகள் ஹரியாணாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். ஹரியாணா மாநிலம் கா்னால் மாவட்டத்தில் உள்ள முனாக்கில் யமுனை ஆற்றில் இருந்து இந்த கால்வாய் உருவாகிறது என்றாா்.
பழுது நீக்கும் பணி: தில்லி நீா் வளத் துறை அமைச்சா் அதிஷி எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு இடுகையில், ‘இன்று அதிகாலை முனாக் கால்வாயின் துணை கிளைகளில் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தில்லி ஜல் போா்டு ஹரியாணா நீா்ப்பாசனத் துறையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. முனாக் கால்வாயை நீா்பாசனத் துறை பராமரிக்கிறது. கால்வாயின் மற்ற உபகிளைக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பழுது நீக்கும் பணி தொடங்கிவிட்டது. உடைந்த கால்வாயின் துணை கிளை நாளை வெள்ளிக்கிழமை முதல் செயல்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.