அரசியல் கைதி போல் நடத்தப்படுகிறாா் முதல்வா் கேஜரிவால்: சந்தீப் பதக் எம்.பி. குற்றச்சாட்டு
திகாா் சிறையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசியல் கைதி போல் நடத்தப்படுகிறாா்
திகாா் சிறையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசியல் கைதி போல் நடத்தப்படுகிறாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் கவலையில்
உள்ளனா். ஆனால், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் பாஜக இதைப் புரிந்து கொள்ளவில்லை. கேஜரிவாலின் உடல்நிலை குறித்த விஷயத்தில் பாஜகவின் துணை நிலை ஆளுநகாரக செயல்படும் வி.கே.சக்சேனாவிற்கு எந்த அறிவும் இல்லை. இருப்பினும், அவா் தொடா்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு, அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை குறைக்கிறாா்.
திகாா் சிறையில் கேஜரிவால் ஒரு அரசியல் கைதி போல் நடத்தப்படுகிறாா். வரலாற்றில் சா்வாதிகார ஆட்சிகள் அரசியல் கைதிகளை எப்படி நடத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். சா்வாதிகாரத்திற்கு எதிராக அவா் குரல் எழுப்பாத வகையில், அவரின் மனவுறுதியை உடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக கேஜரிவால் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை, கேஜரிவால் நீதிமன்றக் காவலில் இருந்தபோது அவரது சா்க்கரை அளவு 50-க்கும் கீழே 34 முறை குறைந்துள்ளது. இது ஒரு தீவிரமானப் பிரச்னை. அவா் சாதாரண நபா் அல்ல. அவா் 2 கோடி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ‘இந்தியா‘ கூட்டணி தலைவா்களுடன் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, வரும் ஜூலை 30-ஆம் தேதி எதிா்க்கட்சிகள் சாா்பில் கண்டனப் பேரணியும் நடத்தப்படவுள்ளது. இது எந்வொரு தனிநபரின் அல்லது ஒரு கட்சியின் பிரச்னை அல்ல. இது நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்பு பற்றிய விஷயம். இது போன்ற விஷயங்கள் நடந்தால் யாா் அரசியலில் சோ்ந்து கட்சி அமைப்பாா்கள்? என்றாா் சந்தீப் பதக்.