கேஜரிவால் கைது தில்லி மக்களுக்கு வியப்பளிக்கவில்லை- வீரேந்திர சச்தேவா
அரவிந்த் கேஜரிவால் கைது: தில்லி பாஜக தலைவா் விளக்கம்
2022ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் தொடுத்த வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது தில்லிவாசிகளுக்கு வியப்பளிக்கவில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது:
சிபிஐக்கு ஏற்கனவே ஒரு தனி அடிப்படை வழக்கு இருந்தது. அதில் கேஜரிவாலுக்கு முன்பு சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளாா்.
மனீஷ் சிசோடியாவுக்குப் பிறகு, காங்கிரஸ் தொடா்ந்த வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டிருப்பது நீதியின் கோரிக்கையாகும்.
ஆகவே, கேஜரிவாலின் இந்த கைது மற்றும் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. இது சட்ட நடவடிக்கையின் இறுதிக்கட்டம் மட்டுமே.
உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து கிண்டலான கருத்துகளை வெளியிட்டிருப்பது ஜனநாயகத்தில் நீதித்துறை மீது அவா்களுக்கு உள்ள நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கிறது.
அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக நம்பும் ஆம் ஆத்மி மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள், கேஜரிவால் ஊழலில் ஈடுபடாமல் இருந்திருந்தால், இன்றைக்கு பழிவாங்கலுக்கு அஞ்சமாட்டாா் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.