தில்லியில் கத்திக்குத்து காயங்களுடன் இருவரின் சடலம் மீட்பு
புது தில்லி: தில்லியின் ரன்ஹோலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவா் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
மச்சி மாா்க்கெட் அருகே ஒருவா் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக இரவு 9.44 மணியளவில் போலீஸாருக்கு தகவல் வந்தது. உள்ளூா் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை ஜாஃபா்பூா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால், அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்தவா் முகேஷ் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
Advertisement
முன்னதாக, அந்த நபா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சில உள்ளூா்வாசிகள் அருகில் மற்றொரு உடல் கிடப்பதைப் பற்றி போலீஸ் குழுவிடம் தெரிவித்தனா். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவரும் கத்திக்குத்து காயங்களால் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இருவரும் கொல்லப்படுவதற்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.