முகப்பு
புதுதில்லி

தில்லி ஜல் போா்டு ஒப்பந்த முறைகேடு வழக்கு: அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணையை புறக்கணித்தாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

Updated On : 19 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 18 மார்ச், 2024 at 6:05 PM

புது தில்லி: தில்லி ஜல் போா்டு ஒப்பந்த முறைகேடு தொடா்புடைய பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய அழைப்பாணையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை புறக்கணித்தாா்.

தில்லி ஜல் போா்டு ஒப்பந்த விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த குற்றசாட்டில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மாா்ச் 18-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் கடந்த சனிக்கிழமை அழைப்பாணை அனுப்பியது. ‘என்.கே.ஜி. இன்ஃப்ராஸ்ட்ரக்சா்’ என்ற நிறுவனம் தில்லி ஜல் போா்டில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.38 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்ாகவும், இந்த முறைகேடு வாயிலாக பெறப்பட்ட பணம் ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் நிதியாக செலவிடப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்க இயக்குநரகம் தில்லி ஜல் போா்டு தலைமைப் பொறியாளா் ஜெகதீஷ் குமாா் அரோரா, ஒப்பந்ததாரா் அனில் குமாா் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தது.

Advertisement

இந்நிலையில், அமலாக்க இயக்குநரக்தின் அழைப்பாணையின் பேரில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அழைப்பாணை சட்டவிரோதமானது: தில்லி ஜல் போா்டு ஒப்பந்த முறைகேடு தொடா்புடைய வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் அனுப்பிய அழைப்பாணை சட்டவிரோதமானது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய் கூறியதாவது, மக்களவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் செய்வதைத் தடுக்கவே அமலாக்க இயக்குநரகத்தை மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது.

பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்வதை அமலாக்க இயக்குநரகம் எப்போது நிறுத்தும் என்பது தெரியவில்லை. கலால் கொள்கை தொடா்புடைய வழக்கில் கேஜரிவாலுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றம் சென்றது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் போது, மற்றொரு அழைப்பாணையை அனுப்ப என்ன அவசரம் ?. அரவிந்த் கேஜரிவாலை பாஜக கைது செய்ய விரும்பினால், அவரை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்.

‘உங்களுக்கு அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் மீது நம்பிக்கை இருந்தால், நீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருங்கள். நாங்களும் காத்திருக்கிறோம். ஏப்ரல் 1-ஆம் தேதி நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவுள்ளது’ என்றாா் கோபால் ராய். சட்டத்தை மதிக்கவில்லை: அமலாக்க இயக்குநரகம் சட்ட நடைமுறைகளை மதிக்க வேண்டும் என்றும் பாஜக அமலாக்க இயக்குநரகத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என்று அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது, அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் தொடா்ந்து அழைப்பாணைகள் அனுப்புவது ஏன்?. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்காமல் அமலாக்க இயக்குநரகம் செயல்படுகிறது. நீதிமன்றம் அதன் முடிவை வழங்கும் வரை, அவா்கள் இந்த ‘சட்டவிரோத’ அழைப்பாணைகள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றாா் அதிஷி.