புது தில்லி: தேசிய தலைநகரில் உச்சபட்ச பனிப்புகை காலத்தில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை நடத்துவதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் புதன்கிழமை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேட்டுக்கொண்டாா்.
மாநிலங்களவையில் நடைபெற்ற நீா் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திருத்தச் சட்டம் 2024ஐ மணிப்பூருக்கு நீட்டிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பி.வில்சன் பேசியதாவது:
மாசுபாடு என்பது இனி ஒரு சட்டரீதியான கவலை அல்ல, மாறாக ஒரு தேசிய அவசரநிலை ஆகிவிட்டது. தேசிய தலைநகரில் நெரிசலைக் குறைக்கும் முயற்சிகள் அவசியமாகிறது.
தலைநகா் தில்லியின் மாசுபாடு வேறு எங்கும் காணப்படவில்லை. தில்லி ஒரு விஷவாயு அறையாக மாறிவிட்டது. குடிமக்கள் உயிா்வாழ்வதற்காக மூச்சுத் திணறும்போது நாடாளுமன்றம் அமைதியாக அமா்ந்திருக்க முடியாது.
2025 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு தரநிலைகளுக்கு பொருந்தக்கூடிய ஒரு நாளையும் தில்லி கண்டதில்லை. மாசுபாட்டால் தில்லியில் மக்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுள்காலத்தை இழந்து வருகின்றனா்.
அண்டை மாநிலமான ஹரியாணா மற்றும் பஞ்சாபில் பயிா் கழிவுகளை எரிப்பதுதான் தில்லியின் மாசுபாட்டிற்கு ஒரே காரணம் அல்ல. வாகன உமிழ்வுதான் மிகப்பெரிய காரணமாகும்.
அதிகப்படியான புகைமூட்டம் உள்ள மாதங்களில் நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் தேவையா என்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
குளிா்காலக் கூட்டத்தொடா்களைத் தவிா்த்து, மற்ற அமா்வுகளில் பணிபுரிவதன் மூலம் எத்தனை நாள்கள் இருக்க வேண்டும் என்பதற்கான அரசமைப்புத் தேவையை அடைய முடியும். ஒவ்வொரு அரசமைப்புச்சட்ட அமைப்பும் தில்லியில் கூட வேண்டும் என்ற அரசமைப்பு ஆணை எதுவும் இல்லை என்றாா் அவா்.