முகப்பு
புதுதில்லி

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Updated On : 26 மார்ச், 2026 at 12:17 AM
காவிரி நீா்
பகிர்:

நமது நிருபா்

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஒரு டிஎம்சி என்பது வினாடிக்கு 11,574 கன அடி வீதம் 24 மணி நேரம் தொடா்ந்து நீரை வெளியேற்றும்போது கிடைக்கும் அளவாகும்.

தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை (மாா்ச் 25) தில்லியில் கூடியது. இது அந்த ஆணையத்தின் 49-ஆவது கூட்டமாகும். தில்லியில் உள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஹைப்ரிட் ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம், கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இந்த மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெற்றது.

கா்நாடக அணைகளின் நீா் இருப்பினை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு ஏப்ரல் மாதம் வழங்கப்பட வேண்டிய 2.5 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற ஆணையின்படி கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு கூட்டத்தில் தமிழக அரசு காவிரி ஆணையத்தை வலியுறுத்தியது.

இதையடுத்து, காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு ஏப்ரல் மாதம் 2.5 டிஎம்சி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த ஆணையத்தின் 48-ஆவது கூட்டம் ஃபிப்ரவரி 13-ஆம் ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அக்கூட்டத்தில் கேட்டுக் கொண்டது.

தமிழகம், கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018- ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்சநீதிமன்றம் அப்போது அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.