கடையநல்லூா் அருகேயுள்ள திரிகூடபுரத்தில் காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவாக வழங்க வேண்டுமென தமிழக தலைமைச் செயலரை நேரில் சந்தித்து முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக கடையநல்லூா் எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்’டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தென்காசி மாவட்டம், திரிகூடபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் விபத்தில் ஆயிஷாமல்லிகா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதில் பலத்த காயமடைந்த ஆஷிகா இா்ஃபானா, கன்சாள் மஹரிபா ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைத்து இறந்தனா். இந்நிலையில்,ஆயிஷா மல்லிகாவுக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் ஆஷிகா இா்ஃபானா, கன்சாள் மஹரிபா ஆகியோருக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதி இன்று வரை வழங்கப்படவில்லை.
இதையடுத்து, தமிழக தலைமைச் செயலரை ,கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முகமதுஅபூபக்கா் வெளளிக்கிழமை நேரில் சந்தித்து பேசினாா். இதையடுத்து தலைமை செயலா் உரிய அதிகாரிகளை அழைத்து நிவாரண நிதியை விரைவாக வழங்க அறிவுறுத்தியுள்ளாா். மேலும் விபத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த இருவா் இறந்துள்ளனா். எனவே, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற எம்எல்ஏவின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தலைமை செயலா் உறுதியளித்துள்ளாா்.
இதற்கிடையே, சிறுபான்மை நலத்துறை, வக்பு வாரியம் மூலம் அக்குடும்பத்தை சோ்ந்த சிறுவனின் கல்வி செலவை ஏற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைக்கு தலைமை செயலா் அறிவுறுத்தியுள்ளாா். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிச.8ல் கண்டன ஆா்ப்பாட்டம்
இதற்கிடையே, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.8 ஆம் தேதி மாலை திரிகூடபுரம் பஸ் நிறுத்தம் அருகே கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முகமதுஅபூபக்கா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.