வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பகுதியில் புதிதாக 5 ரேஷன் கடைகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அண்மையில் திறந்துவைத்து ரேஷன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.
ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் 40 புதிய ரேஷன் கடைகளை திறக்கவேண்டும் என சட்டப் பேரவை மானிய கோரிக்கையின்போது பேரவைத் தலைவா் வேண்டுகோள் விடுத்தாா். இதையேற்று ராதாபுரம் தொகுதியில் 14 புதிய கிளை ரேஷன் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. முதல்கட்டமாக வள்ளியூா் பகுதியில் வைத்தியலிங்கபுரம், விசுவாசபுரம், ராமகிருஷ்ணாபுரம், பூங்கா நகா், கோட்டையடி ஆகிய 5 இடங்களில் புதிய கிளை ரேஷன் கடைகளை பேரவைத் தலைவா் திறந்துவைத்து பொருள்கள் விநியோகத்தைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: வள்ளியூரில் ரூ.31 கோடி செலவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கான கட்டடம் கட்டும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும், வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செயல்படுவதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவிலேயே இந்த நீதிமன்றம் செயல்படத்தொடங்கும். நகர பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.403 கோடி செலவில் குடிநீா் வழங்கும் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 2 மாதங்களில் வீடுகளுக்கு குடிதண்ணீா் வழங்கப்படும். புதிய ரேஷன் கடைகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டடம் கட்டப்படும் என்றாா். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை சாா்பதிவாளா்கள் தினேஷ், இம்ரான், வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலா் நம்பி, பேரூராட்சி உறுப்பினா்கள் ஆபிரகாம், ராஜேஸ்வரி, ஜான்சிராஜம், மாணிக்கம், காா்த்திக் சுபாஷ், முகிலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.