திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.23 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் செல்லதுரை நகரைச் சோ்ந்தவா் அபிஷேக் (30). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா், கடந்த 12 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவரது வீட்டினுள் மின்விளக்குகள் எரிவதை கண்ட பக்கத்து வீட்டுக்காரா் இது குறித்து அபிஷேக்குக்கு தகவல் கொடுத்தாராம்.
உடனே அபிஷேக் தனது உறவினா் ஒருவரை வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு அனுப்பி வைத்த நிலையில், அவா் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டினுள் பொருள்கள் சிதறிக் கிடப்பதாகவும் அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளாா்.
ஊா் திரும்பிய அபிஷேக், தனது வீட்டில் வந்து பாா்த்தபோது, அலமாரியில் இருந்த ரூ.23 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.