நித்திரவிளை அருகே முந்திரி தோப்பில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நித்திரவிளை அருகேயுள்ள பூந்தோப்புகாலனி, ஏ.வி.எம். கால்வாய் கரையோரம் உள்ள முந்திரி தோப்புக்கு சனிக்கிழமை காலை விளையாடச் சென்ற சிறுவர்கள் அப்பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டனராம். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் நித்திரவிளை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் நித்திரவிளை அருகேயுள்ள ஆலுமூடு பகுதியைச் சேர்ந்த ரசாலம் மகன் பால்ராஜ் (60) என்பதும், கட்டுமானத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.